Thursday, April 30, 2015

16. வைஷ்ணவ ஜனதோ

'வைஷ்ணவ ஜனதோ' என்ற பஜனை கீதம் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங்  மேத்தா என்ற குஜராத்திக் கவிஞரால் இயற்றப்பட்டது.

மகாத்மா காந்திக்கு இது மிகவும் பிடித்த பாடல் என்பது அனைவரும் அநேகமாக அறிந்திருக்கக் கூடிய ஒரு விஷயம்.

முன்பெல்லாம் அகில இந்திய வானொலியில் வெள்ளிக்கிழமை காலையில் ஓலி பரப்பப்பட்டு வந்த 'காந்தி ஜயந்தி' நிகழ்ச்சி இந்தப் பாடலுடன் தான் துவங்கும்.

இந்தப் பாடல் பிரபலமாக இருந்தாலும், இதன் பொருள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கு முன் Readers' Digest பத்திரிகையில் இந்தப் பாடலின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளி வந்தது. அதன் அடிப்படையில், இந்தப் பாடலைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். மொழி பெயர்த்த பிறகு,  Wikipedia இணையதளப் பக்கத்திலும் ஆங்கில மொழி பெயர்ப்பு இருந்ததைப் பார்த்தேன். அந்த மொழி பெயர்ப்பையும் கருத்தில் கொண்டு, சில மாறுதல்கள் செய்திருக்கிறேன். இது மொழிபெயர்ப்புக் கவிதை என்பதால் மரபுக் கவிதை போல் இருக்காது. (தமிழில் எழுதப்படும் பல கவிதைகள் தமிழ்க் கவிதை மரபுகளைப் பின்பற்றுவதில்லை என்பது வேறு விஷயம்!)

வைஷ்ணவ ஜனதோ (வைணவப் பெருமக்கள்)

வைணவர் என்பவர் யார்?
இன்னொருவர் வலியை உணர்பவர் பார்!
மற்றவர் துன்பத்தைப் பகிர்ந்து கொள்பவர்
என்றும் தான் எனும் அகந்தை சற்றும் கொள்ளாதவர்!

வைணவர் மதிப்பார் உலகில் உள்ளோர் அனைவரையும்
எவர் குறித்தும் கூறார் தீய சொல் எதுவும்
எண்ணம், சொல், செயல் மூன்றிலும் உறுதியானவர்
புண்ணியம் செய்தவள் அவரைப் பெற்ற தாய்

எல்லோரும் சமம் வைணவருக்கு, பேராசை அண்டாது அவரை.
பெண்களைத் தன் தாய்போல் மதிப்பவர் அவர்
பொய்யின் சுவையை அறியாது அவர் நாக்கு அவர் இறுதி மூச்சு வரை
நாட்டம் இல்லை அவருக்குப் பிறர் ஈட்டிய செல்வத்தில்.

சிறிதும் பற்றில்லை அவருக்கு இவ்வுலகப் பொருட்களின் மீது
துறவைத்தான் நாடும் அவர் மனம்
இறைவனின் திருநாமமே என்றும் ஈர்க்கும் அவரை
அவருள்ளே அடங்கும் அத்தனை திருத்தலங்களும்!

வஞ்சனையும் பேராசையும் விலகி நிற்கும் அவரிடமிருந்து
காமத்தையும் கோபத்தையும் விரட்டி அடித்தவர் அவர்
தம் தலைமுறைகள் அனைத்தையும்  தூக்கி நிறுத்தும் அவர் நற்பண்புகள்
அத்தகைய சான்றோரைச் சந்திக்க விழைகிறது என் மனம்

இந்த வலைப்பதிவு தென்னிந்திய, குறிப்பாக ராமானுஜர்  வழி வைணவத்தைப் பற்றித்தான் என்றாலும், இந்த குஜராத்திக் கவிதை வைணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்துக் காட்டியிருப்பதால் இதை இங்கே சேர்த்திருக்கிறேன்.

வை(ஷ்)ணவர் என்றால் விஷ்ணுவை வணங்குபவர் என்று பொருள். விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். (எல்லோருக்கும்) உள்ளே புகுந்திருப்பவர் என்றும் பொருள். நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளேயும் இருப்பவர் என்ற பொருளைக் குறிக்கும் 'கடவுள்' என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிகரான சொல் விஷ்ணு. விஷ்ணுவை வணங்குபவர்கள் அகத் தூய்மையுடனும், அனைவரையும் தன்னைப்போல் கருதுபவராகவும் இருக்க வேண்டும் என்ற இந்தப் பாடலின் கருத்து வைணவத்துக்கு ஒரு நல்ல விளக்கமாக அமைந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

நாம் அனைவருமே வைணவப் பெருமக்களாக   இருக்க முயல வேண்டும்.

இந்தப் பாடலைப் பல வட இந்திய,, தென்னிந்திய இசைக் கலைஞர்கள் பாடியிருக்கிறார்கள்.M.S. சுப்புலக்ஷ்மி அவர்கள் குரலில் இந்தப் பாடலைக் கீழே இருக்கும் Youtube வலைப்பக்கத்தில் கேட்டு மகிழுங்கள்.