Tuesday, May 15, 2018

63. திவ்யதேச தரிசன அனுபவம் - 42 திருவதரியாச்சிரமம் (101) - பத்ரிநாத்

தரிசனம் செய்த நாள்: 04.05.18 & 5.5.18 வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை   
 வடநாட்டுத் திருப்பதிகள் - 12  
6. திருவதரியாச்சிரமம் (101)   

6. திருவதரியாச்சிரமம்
தாட்கடிமை யென்று தமையுணாரார்க் கெட்டெழுத்தும்
கேட்கவெளி யிட்டருளுங் கேசவனை - வேட்கையொடு
போவதரி தானாலும் போய்த்தொழுவோ நெஞ்சமே!
மாவதரி யாச்சிரமத் து. (101)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

இந்தியாவின் வட எல்லையில், இமயமலையின் உச்சியில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 10400 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது பத்ரிநாத் ஆலயம்.

ரிஷிகேஷிலிருந்து 295 கிலோமீட்டர் தூரத்திலும், ஹரித்வாரிலிருந்து 320 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது இந்த திவ்ய தேசம்.





பதரி என்றால் இலந்தை. இலந்தை மரத்தின் கீழ் அமர்ந்து மகாவிஷ்ணு தவம் செய்ததால் இந்த இடத்துக்கு பதரி அல்லது பத்ரி என்று பெயர் வந்தது.

உலகில் வாழும் உயிர்களின் நலனுக்காக பகவான்  இங்கே காலம் காலமாகத் தவம் செய்து கொண்டிருக்கிறார்  என்று பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பெருமாள் இங்கே நரன்-நாராயணன் என்ற இருவராக இருக்கிறார். நாராயணனாக குரு ஸ்தானத்தில் இருந்து நரன் என்ற சிஷ்யன் ஸ்தானத்தில் இருக்கும் தனக்கே உபதேசம் செய்கிறார் இவர்.

இங்கே அவர் உபதேசம் செய்தது எட்டெழுத்து மந்திரத்தை. (பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம், முன்பு ஒரு சமயம் நீயும் நானும் நர நாராயணனாக இருந்தோம் என்று கூறுகிறார்.)





எட்டு ஸ்வயம் வக்த (தானே உருவான) க்ஷேத்திரங்களில் பத்ரிநாத்தும் ஒன்று. (மற்றவை ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், சாளக்கிராமம், புஷ்கரம், திருநீர்மலை).

மகாவிஷ்ணு வாமன அவதாரத்தின்போது, திரிவிக்கிரமனாய் விஸ்வரூபம்
எடுத்து, மண்ணுலகையும், விண்ணுலகையும்  தன்  திருவடிகளால் அளந்தார், அவரது திருவடி சத்யலோகத்தை எட்டியபோது, பிரம்மா அந்தத் திருவடியைத்  தன்  கமண்டலத்தில் இருந்த நீரினால் திருமஞ்சனம் செய்தார். பெருமாளின் திருவடியில் பட்ட நீர்தான் கங்கையாய்ப் பாய்ந்தது.

பகீரதனின் தவத்தின் காரணமாக கங்கை பூமிக்கு வந்தபோது அதை இங்கிருந்த நீலகண்ட மலை தடுத்தது. 



அப்போது இந்திரன் தன் யானையான ஐராவதத்தின் தந்தங்களால் இந்த மலையைப் பிளக்க, மலை நரன், நாராயணன் என்று இரண்டு மலைகளாகப் பிரிய, இந்த இரண்டு மலைகளுக்கிடையே கங்கை பாய்ந்து வந்தது.


கோயிலுக்கு முன்புறம் அலகனந்தா நதி ஓடுகிறது. பாலத்தைத் தாண்டியதும் கோவில். அலகனந்தா நதியின் கிழக்குப் புறம் நரன் மழையும், மேற்குப்புறம் நாராயணர் மலையும் இருக்கின்றன.

கோயிலுக்கு அருகே வெந்நீர் ஊற்று ஒன்று இருக்கிறது. தப்த குண்ட் என்று அழைக்கப்படும்  இந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க வசதியாகப் பல தொட்டிகள் கட்டப்பட்டு அவற்றின் ஊடே இந்த ஊற்று நீர் ஓட விடப்படுகிறது. அதனால் அதிகாலையில் விறைக்கும் குளிரிலும், பலரும் இங்கே குளித்து வீட்டுக் கோவிலுக்குச் செல்ல முடிகிறது. (இந்த வெந்நீர் ஊற்றும் கங்கை நீர்தான்.எனவே இதில் நீராடுவதும் புனிதமானதுதான்.)

கோவிலில், சந்நிதிக்குள் பத்ரிநாத் நான்கு கைகளுடன் பத்மாசனத்தில் அமர்ந்து யோக நிலையில் இருக்கிறார். இவர் அருகே கருடன், குபேரன், நாரதர், உத்தவர், நரன், நாராயணன் ஆகியோர் இருக்கின்றனர்.


சந்நிதிக்கு எதிரே கருடன் இருக்கிறார்.

பிரகாரத்தில் மகாலக்ஷ்மி (அரவிந்தவல்லி), ஆஞ்சநேயர், பத்ரிநாதஸ்வரூப மூர்த்தி, க்ஷேத்ரகண்டதேவதை, நர நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. பத்ரிநாதஸ்வரூப மூர்த்தி உள்ளே இருக்கும் பத்ரிநாதரின் வடிவத்தில் உத்சவமூர்த்தி போல் காட்சி அளிக்கிறார்.

கோவில் வருடத்தில் ஆறு மாதங்கள்தான் திறந்திருக்கும் (மே  முதல் அக்டோபர் வரை) நவம்பர் முதல் ஏப்ரல் வரை பனிமூட்டம் காரணமாகக் கோவில் மூடியிருக்கும். அப்போது பெருமாள் ஜோஷிமட் நரசிங்கர் ஆலயத்தில் எழுந்தருளி நமக்கு சேவை சாதிப்பார்.


பத்ரிநாத்தைச் சுற்றியுள்ள மலைகள் பற்றி மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்வர்க்க ஆரோகணி என்ற மலையில் ஏறிப் பாண்டவர்கள் சென்றபோது ஒவ்வொருவராக மாண்டு சொர்க்கத்துக்குப் போனதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பத்ரிநாத்தையும், அதற்கு அருகில் உள்ள மானா என்ற கிராமத்தையும் தாண்டித்தான் பாண்டவர்கள் சென்றார்கள். மானா கிராமத்தில் பீம் புள் (பீமன் குட்டை)  என்ற இடம் உள்ளது. பீமன் இதில் நீராடித் தன்  பாவங்களைப்  போக்கிக் கொண்டதாக நம்பிக்கை. வியாசர் குகை என்ற இடமும் மானா கிராமத்தில் உள்ளது.

பத்ரிநாத் பற்றி பத்மபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மூலவர் - பத்ரிநாராயணன் 
இருந்த திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தாயார் - அரவிந்தவல்லி நாச்சியார் 

தீர்த்தம் - தப்த குண்டம் 

விமானம் - தப்த காஞ்சன விமானம் 

விருக்ஷம் - பத்ரி (இலந்தை)





கோவிலுக்கு அருகில் அலகனந்தா நதிக்கரையில் முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்துத் திதி செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

4.5.18 மதியம் ஒருமுறை, மாலை ஒருமுறை, 5.5.18 விடிகாலை ஒருமுறை (விஸ்வரூப தரிசனம்) பத்ரிநாதரை தரிசனம் செய்யும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது.

5.5.18 அன்று காலை திதியும் செய்து பத்ரிநாத் யாத்திரையைப் பூர்த்தி செய்தேன்.


கோவிலின் அமைப்பையும், அலகனந்தா நதியையும் இந்த வீடியோவில் காணலாம்.

திருவதரிகாசிரமம் என்று அழைக்கப்படும் இந்த திவ்யதேசத்தைப் பெரியாழ்வார் ஒரு பாசுரத்திலும், திருமங்கை ஆழ்வார் 21 பாசுரங்களிலும்  மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். பாசுரங்கள் இதோ!

பெரியாழ்வார் திருமொழி
நான்காம் பத்து 
ஏழாம் திருமொழி  

வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே (399)

திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி \
முதல் பத்து 
மூன்றாம் திருமொழி
1. முற்றமூத்துக் கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து
இற்றகால்போல் தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே. (968)

2. முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே. (969)

3. உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டு பண்கள் பாடும் வதரிவணங்குதுமே. (970)

4. பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி
தாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே. (971)

5. பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன்,
வண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே. (972)

6. எய்த்த சொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம்
பித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன்
அத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த
மைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே. (973)

7. பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர் மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும் நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே. (974)

8. ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர் உள்ளம்
கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே. (975)

9. புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே. (976)

10. வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை,
கண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை,
கொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில்,
அண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே. (977)

நான்காம் திருமொழி
1.ஏனமுனாகி யிருநிலமிடந்து அன்றிணையடி யிமையவர்வணங்க,
தானவனாகம் தரணியில்புரளத் தடஞ்சிலை குனித்தவெந்தலைவன்,
தேனமர் சோலைக் கற்பகம்பயந்த தெய்வநன்னறு மலர்க்கொணர்ந்து,
வானவர் வணங்கும்கங்கை யின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (978)

2. கானிடையுருவைச் சுடுசரம்துரந்து கண்டுமுங்கொடுந் தொழிலுரவோன்,
ஊனுடையகலத்தடு கணைகுளிப்ப உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்,
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட  பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (979)

3. இலங்கையும் கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும், அரக்கர்
குலங்களும் கெடமுன் கொடுந் தொழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற,
விலங்கலிலுரிஞ் சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடி யெனவிரிந்து,
வலந்தரு மணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (980)

4. துணிவினியுனக்குச் சொல்லுவன்மனமே. தொழுதெழுதொண்டர்கள்தமக்கு,
பிணியொழித்தமரர்ப்பெரு விசும்பருளும் பேரருளாளனெம்பெருமான்,
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து,
அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (981)

5.பேயிடைக்கிருந்து வந்தமற்றவள்தன் பெருமுலைசுவைத்திட  பெற்ற
தாயிடைக் கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,
சேய்முகட்டுச் சியண்டமுஞ்சுமந்த செம்பொன்செய் விலங்கலிலிலங்கு,
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (982)

6. தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி திறத்து ஒருமறத்தொழில்புரிந்து,
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த பனிமுகில்வண்ணனெம்பெருமான்,
காரணந்தன்னால்கடும்புனல்கயத்தகருவரைபிளவெழக்குத்தி,
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (983)

7.வெந்திறல்களிறும் வேலைவாயமுதும் விண்ணொடு விண்ணவர்க்கரசும்,
இந்திரற்கருளி யெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான்,
அந்தரத்தமரரடி யிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி,
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (984)

8. மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன்பொன்னிறத்துரவோன்,
ஊன்முனிந்த வனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து, அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (985)

9. கொண்டல்மா ருதங்கள்குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும்,
உண்டமா வயிற்றோனொண் சுடரேய்ந்த உம்பருமூழியுமானான்,
அண்டமூடறுத் தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர, பெருகு
மண்டுமா மணி நீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (986)

10. வருந்திரை மணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை,
கருங்கடல் முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல்,
வரஞ்செய்த வைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன் மருவி,

இருங்கடலுலக மாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே. (987)


திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல் 
2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

ஓம் நமோ நாராயணாய !




1 comment: