Monday, September 30, 2019

73. திவ்யதேச தரிசன அனுபவம் - 52. திருவண்புருடோத்தமம் (34)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
 34. திருவண்புருடோத்தமம்

சாய்ந்த திருவரங்கந் தண்வேங் கடங்குடந்தை
ஏய்ந்த திருமா லிருஞ்சோலை - பூந்துவரை
வண்புருடோத் தமமாம் வானவர்க்கும் வானவனாம்
ஒண்புருடோத் தமன்ற னூர் (34)

     - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

திருவண்புருடோத்தமம், திருத்தெற்றியம்பலம், அரிமேய விண்ணகரம், வைகுண்ட விண்ணகரம், திருமணிமாடக் கோவில், செம்பொன்செய் கோவில் ஆகிய ஆறு திவ்யதேசங்களும் அருகருகே அமைந்துள்ளன.

வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் பெருமாளுக்கு பூமாலை சூட்டும் பணியைச் செய்து வந்தார். ஒரு நாள் தன் குழந்தை உபுமன்யுவை உட்காரவைத்துவிட்டு பூப்பறிக்கச் சென்றார்.

குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி கேட்டுக்கொண்டபடி, வண் புருஷோத்தமர் திருப்பாற்கடலை வரவழைத்துக் குழந்தைக்குப் பால் புகட்டினார். பின் அங்கு வந்த வியாக்ரபாத முனிவருக்குக் காட்சி தந்தார் என்பது இத்தலத்தின் பெருமை.

குழந்தைக்கு ஏற்படும் துன்பத்தைப் பெற்றோர் களைவது போல், பிரம்மா முதலிய தேவாதி தேவர்களுக்கும் ஏற்படும் துன்பத்தைப் போக்கி, அவர்களுக்குத் தீங்கு செய்பபவர்களை அழித்து உலகத்தைக் காக்கும் "புருடோத்தமன்" இவரே. இவரது வள்ளல் தன்மையைக்  காட்டும் விதத்தில்  "வண்" என்ற சொல் சேர்த்து இவரது திருநாமம் "வண்புருடோத்தமன்" என்று வழங்குகிறது.

மூலவர்: வண் புருடோத்தமன், பட்டாபிராமன்

உற்சவர்: புருஷோத்தமன்

தாயார்:  புருஷோத்தம நாயகி

தீர்த்தம்: திருப்பாற்கடல் தீர்த்தம்

விமானம்: சஞ்சீவி விக்ரஹ விமானம்

ஸ்தல விருட்சம்: பலா, வாழை

பெருமாள் சந்நிதிக்கு வெளியே பார்த்தசாரதி, சுலோசனா, சண்டன், பிரசண்டன் விக்கிரகங்கள் உள்ளன,

பிரகாரத்தில் தாயார் சந்நிதி உள்ளது.

முன்புறம், சந்நிதிக்கு வலப்புறம் சக்கரவர்த்தித்த திருமகன் சந்நிதி உள்ளது. சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயருடன் ராமர் காட்சி அளிக்கிறார்.
அருகில் ராமானுஜர் சந்நிதியும் உள்ளது.

சக்கரவர்த்தித் திருமகன் சந்நிதிக்கு எதிரே ராமரை நோக்கியபடி சிறிய திருவடி சந்நிதி உள்ளது . இது தவிர, அருகில் ஹனுமான் சந்நிதியும் உள்ளது. சக்கரவர்த்தித் திருமகன் சந்நிதியில் உள்ள ஆஞ்சநேயரையும் சேர்த்தால் இந்தக் கோவிலில் மூன்று ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன.

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையைக் கீழே உள்ள வீடியோவில் கேளுங்கள்.



திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசப் பெருமால் குறித்து 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

பாசுரங்கள் இதோ.
நாலாயிர திவ்யப்பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
நான்காம் பத்து 
இரண்டாம் திருமொழி
 திருநாங்கூர் வண்புருடோத்தமம்
1. கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1258)

2. பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,
ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1259)

3. அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,
வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1260)

4. பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,
ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1261)

5. சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1262)

6. அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த,
கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில்,
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள்,
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1263)

7. உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை
அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,
இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1264)

8. வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க
மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1265)

9. இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,
குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1266)

10. மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,
அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,
பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே. (1267)

| ஓம் நமோ நாராயணாய |









Saturday, September 28, 2019

72. திவ்யதேச தரிசன அனுபவம் - 51. திருவெள்ளக்குளம் (39)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
39. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்)


நானடிமை செய்யவிடாய் நானானே னெம்பெருமான்
தானடிமை கொள்ளவிடாய் தானானான்--ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாயிரு வருந்தணிந்தோம்
உள்ளக் குளத்தேனை யொத்து. (39)

     - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

சீர்காழிக்குத் தென் கிழக்கே சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில், நாகப்பட்டினம் செல்லும் வழியில்  அமைந்துள்ள திவ்யதேசம் இது. திருமங்கையாழ்வார் அண்ணா என்று அழைத்தது திருப்பதி பெருமாளையும், அண்ணன் கோவில் பெருமாளையும் மட்டும்தான். திருமங்கையாழ்வார் முதலில் பாடியது இவரைத்தான் என்பதால் இந்தக் கோவில் பெருமாள் அண்ணன் பெருமாள் என்று சிறப்பாகக் குறிப்பிடப் படுகிறார்.

இது தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருப்பதிக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற முறை உள்ளது.

இந்தக் கோவிலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசம் என்று பொதுவாகக் குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

சூரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னன் துந்துமாறனின் (இவர் ராமருக்கெல்லாம் முந்தியவர்) மகனான ஸ்வேதனுக்கு 9 வயதில் மரணம் என்ற  சாபம் இருந்தது. வசிஷ்டரின் அறிவுரைப்படி ஸ்வேதன் இந்தக் கோவிலுக்கு வந்து ஐப்பசி மாத சுக்ல தசமி முதல் கார்த்திகை மாத சுக்ல ஏகாதசி வரை இந்தக் கோவில் திருக்குளத்தில் நீராடிப் பெருமாளை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். (நரசிம்ம மிருத்யுஞ்ச மந்திரத்தை அந்த மன்னன் ஜபித்ததாகவும்  கூறப்படுகிறது)

ஸ்வேதம் என்றால் வெள்ளை. ஸ்வேதன் நீராடிய குளம் என்பதால் திருவெள்ளக்குளம் என்ற பெயர் இந்தத் திருத்தலத்துக்கு வந்தது. 

மூலவர்: அண்ணன் பெருமாள், கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம்
உற்சவர்: ஸ்ரீனிவாசன் 
கண்ணன், நாராயணன் என்ற பெயர்களும் பெருமாளுக்கு உண்டு.
பிரத்யட்சம்: ஏகாதச ருத்ரர், ஸ்வேத ராஜன்

தாயார்:  அலர் மேல் மங்கை நாச்சியார் 
உற்சவர் தாயாரின் திருநாமம் பத்மாவதித் தாயார், பூவார் திருமகள்

புஷ்கரணி: ஸ்வேத புஷ்கரணி , வெள்ளக்குளம்

விமானம்: தத்வ யோதாக விமானம்

ஸ்தல விருட்சம்: வில்வம், பரசு 

பெருமாள் சன்னிதிக்கு வெளியே மண்டபத்தில் ஒருபுறம் வினாயகர் மறுபுறம் சேனை முதலியார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன.

அலர் மேல் மங்கைத் தாயார் சன்னிதி பிரகாரத்தில் தனி மண்டபத்தில் உள்ளது. தாயார் சன்னிதிக்கு அருகே திருமங்கை  ஆழ்வாரின் துணைவியார் குமுதவல்லி நாச்சியாருக்கு சந்நிதி அமைந்திருப்பது ஒரு ஆச்சரியம். குமுதவல்லி நாச்சியாரின் அவதாரத் தலம் இது. இவர் பூமிக்கு வந்த ஒரு தேவலோக மங்கை என்று ஐதீகம் உண்டு.

கோவிலுக்கு முன் புறத்தில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம் உள்ளது. இதுதான் ஸ்வேதா புஷ்கரணி  அல்லது திருவெள்ளக்குளம்.

இந்தக் கோவிலில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்படுகின்றன. 

இந்த திவ்யதேசம் பற்றி ஆன்மிகச் சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்கவுரையை இந்த வீடியோவில் கேட்கலாம்.



இந்த் திருத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளது (10 பாசுரங்கள்) 

பாசுரங்கள் இதோ:

நாலாயிர திவ்யப் பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
ஏழாம் திருமொழி   
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்
1. கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே  (1307)
 
2. கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே   1308)
 
3. குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே  (1309)
 
4. கான் ஆர் கரிக் கொம்பு-அது ஒசித்த களிறே
நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர்த்
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே  (1310)
 
5. வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடாவருவேன் வினை ஆயின பாற்றே   (1311)
 
6. கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே   (1312)
 
7. கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்-கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர்ச்   
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே என வல் வினை தீர்த்தருளாயே   (1313)
 
8. வாராகம்-அது ஆகி இம் மண்ணை இடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே   (1314)
 
9. பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே
ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே   (1315)
 
10. நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் என வல்லவர் வானவர்-தாமே             (1316)

|ஓம் நமோ நாராயணாய |