Friday, October 28, 2016

40. திவ்ய தேச தரிசன அனுபவம் 19. திருப்புட்குழி (88)

தரிசனம் செய்த நாள் - 02/09/2016 (வெள்ளிக்கிழமை)

 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
15. திருப்புட்குழி (88)
மால்வே ழமுமரவு மாயையும்வெற் புங்கடலு
மேல்வீழ் படையும் விடமும்போய்ப் - பாலன்
நெருப்புட் குழிகுளிர நின்றதுங்கேட் டோதார்
திருப்புட் குழியமலன் சீர். (88)
பொருள்:  இரணியன், பிரகலாதனை யானையால் இடறச்  செய்தும், பாம்பை விட்டுக் கடிக்கச் செய்தும், மலையிலிருந்து தள்ளியும், கடலில் தூக்கிப் போட்டும், தன்  படை வீரர்களை விட்டுக் கொல்லச் சொல்லியும், பிரகலாதனின் தாயையே விஷம் கொடுக்க வைத்தும் பல வழிகளில் கொல்ல முயன்றும், பெருமாள் மீது வைத்திருந்த பக்தியால் பிரகலாதன் காப்பாற்றப்பட்டான்,  பகவானின் அருளால்  நெருப்புக்குழியும் பிரகலாதனுக்குக் குளிர்ச்சியாக  இருந்த வரலாற்றையெல்லாம் அறிந்திருந்தும், திருப்புட்குழி எம்பெருமானின் பெருமையை உணராமல் இருக்கிறார்களே சிலர்!

திருப்புட்குழி காஞ்சியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து செல்லும்போது, பைபாஸ் சாலையின் வலதுபுறத்தில் பாலுச்செட்டிச் சத்திரமும், இடதுபுறம் திருப்புட்குழியும் அமைந்துள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து தாமல் செல்லும் பஸ்ஸில் ஏறி பாலுச்செட்டிச்  சத்திரம் பஸ்  நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ள வேண்டும். பாலுச்செட்டிச் சத்திரம் பஸ் நிறுத்தத்திலிருந்து சில நூறு அடிகள் நடந்தால் பைபாஸ் சாலை வரும். பைபாஸ் சாலையைக் கடந்து மீண்டும் சில நூறு அடிகள் நடந்தால் கோயில். பாலுச்செட்டிச்  சத்திரம் பஸ் நிறுத்தத்திலிருந்து கோயிலுக்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கும். நடக்க முடியாதவர்கள் ஆட்டோவைப் பயன்படுத்தலாம்.

ராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற முயன்று ராவணனுடன் போராடி அவனால் வெட்டி வீழ்த்தப்பட்ட ஜடாயு சீதையைத் தேடிக்கொண்டு ராமபிரான் வரும் வரையில்  தன் உயிரைப் பிடித்துக்கொண்டிருந்தார். ராமபிரானிடம், ராவணன் சீதையைக் கடத்திச் சென்ற விவரத்தைக் கூறி விட்டு உயிர் துறந்தார். ராமபிரான் விஷ்ணுவாக  ஜடாயுவுக்குக்  காட்சி அளித்து அவருக்கு மோட்சம் அளித்ததுடன் அவருக்கு ஈமச் சடங்குகளையும் செய்தார்.

ஜடாயு என்ற புள்ளுக்கு (பறவைக்கு), ராமர் குழித்தர்ப்பணம் செய்ததால் இந்த ஸ்தலம் திருப்புட்குழி என்று பெயர் பெற்றது. சம்ஸ்கிருதத்தில் இத்தலம் 'க்ருத்ர புஷ்கரணி க்ஷேத்ரம்' என்று அழைக்கப்படுகிறது. (கும்பகோணத்துக்கு அருகில் உள்ள புள்ளம்பூதங்குடி என்ற திவ்யதேசத்துக்கும் இதே வரலாறு கூறப்படுகிறது.)

கோயிலுக்கு முன்புறம் திருக்குளத்துக்கு அருகே ஜடாயுவுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. திருக்குளத்தின்  பெயர் ஜடாயு தீர்த்தம் மற்றும் க்ருத்ர தீர்த்தம்.. கோயில் வாயிற்கதவுக்கு அருகே இந்தக் கோயிலின் ஸ்தலபுராணம் சுருக்கமாக  எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலைப்பற்றி வாமன புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மூலவர் விஜயராகவாப் பெருமாள் நான்கு புஜங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் கிழக்கு நோக்கி இருந்த திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாளுக்கு சமரபுங்கவன் என்று வடமொழியில் ஒரு பெயர் உண்டு. இதைத் தமிழில் போரேறு என்று குறிப்பிடுகிறார் திருமங்கை ஆழ்வார்.


எப்போதும் பெருமாளுக்கு வலப்புறம் இருக்கும் ஸ்ரீதேவி, இங்கே இடப்புறத்தில் இருக்கிறார். (இந்தக் கோயிலிலும், திருவிடந்தையிலும் மட்டுமே ஸ்ரீதேவி பெருமாளுக்கு இடப்புறமாக இருக்கிறார்.) வலப்புறத்தில் பூதேவி இருக்கிறார். பெருமாள் தனக்கு வலப்புறமாக ஜடாயுவின் சிதைக்குத் தீ மூட்ட, தீயின் உக்கிரம் தாங்காமல் ஸ்ரீதேவி இடம் மாறி விட்டார். இடம் மாறியதுடன் கூட சற்றுப் பின் தள்ளியே நிற்பதை நாம் சந்நிதியில் பார்க்கலாம். சிதையே பூமியின் மீதுதான் மூட்டப்படுவதால் பூதேவி  தீயின் உஷ்ணத்துக்குப் பழக்கப்பட்டவர் போலும்!` அதனால்தான் வலப்புறமாகத் தீயின் அருகில் நிற்கிறார் என்று கொள்ளலாம்.

மரகதவல்லித் தாயார் தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கிறார். குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி, தாயார் சந்நிதியில் வைக்கப்பட்ட வறுத்த பயிரை மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்கி எழுந்திருக்கும்போது, பயிறு முளைத்திருந்தால் அவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது இந்தத் தாயாரின் சிறப்பாகும். இது அனுபவரீதியான  உண்மை என்று கூறப்படுகிறது. இதனால் தாயாருக்கு 'வறுத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லித் தாயார்' என்று பெயர்.

விஸ்தாரமான கோயில். அகலமான பிரகாரம். கோயிலின் முகப்பில் கஜானனர் இருக்கிறார். பிரகாரத்தில் ஆண்டாள், மரகதவல்லித் தாயார், ராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

இந்தக் கோயிலின்  குதிரை வாகனம் பெயர் பெற்றது. கல்லால் செய்யப்பட இந்தக்குதிரை அசையும் உறுப்புகளைக் கொண்டது. இதைச் செய்த சிற்பி இதுபோன்ற ஒரு சிற்பத்தை மீண்டும் செய்வதில்லை என்று உறுதியோடு இருந்தாராம்.  8ஆம் உற்சவத்தன்று பெருமாள் இந்தச் சிற்பி இருந்த தெருவுக்கு எழுந்தருளுகிறார்.

இந்தகோயிலில் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. விஜயநகர மன்னர்களாலும் போற்றிப் பராமரிக்கப்பட்டது இக்கோயில்.

ராமானுஜர் யாதவப்பிரகாசர் என்ற அத்வைத ஆச்சாரியாரிடம் பாடம் கற்றது இந்த ஊரில்தான்.  இந்தத் தகவல் இக்கோயில் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் (ஆண்டாள் சந்நிதிக்கு அருகே) சுவற்றில் ஒரு சிற்பமாகத் தீட்டப்பட்டு அதன் அடியில் .  எழுதப்பட்டிருக்கிறது. யாதவப் பிரகாசர் ஆசிரமம் இருந்த இடமும் இவ்வூரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்த இடத்தைச் சென்று பார்க்கும் வாய்ப்பு இம்முறை எனக்குக்  கிடைக்கவில்லை.

இந்த திவ்யதேசத்தை திருமங்கையாழ்வார் தனது இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். வேதாந்த தேசிகர் இந்தப் பெருமாள் மீது 'பரமார்த்த ஸ்துதி' என்ற ஸ்தோத்திரம் இயற்றியுள்ளார்.

நான் முதலில் குறிப்பிட்டப்பட்ட புள்ளபூதங்குடி, திருப்புட்குழி ஆகிய இரு திவ்ய தேசங்களுமே ஜடாயு மோட்சம் அடைந்த இடமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் புள்ளபூதங்குடியே ஜடாயு மோட்சம் அடைந்த இடமாக இருக்கக்கூடும் என்பது பொதுவான கருத்து.

புள்ளபூதங்குடிப் பெருமாள் வல்வில் ராமன் என்ற பெயரில் சீதை, லக்ஷ்மணன் ஆகியோருடன் கூடிய ராமபிரானாகவே எழுந்தருளியிருக்கிறார். திருப்புட்குழியிலோ ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய மஹாவிஷ்ணுவாகவே எழுந்தருளியிருக்கிறார். திருப்புட்குழிப் பெருமானின் திருநாமங்களான விஜயராகவன், போரேறு, சமரபுங்கவன் ஆகிய பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, இத்தலம் திருமால் ஒரு அரக்கனைப் போரில்  வென்ற இடமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. போரில் கொல்லப்பட்டு மோட்சமடைந்த அரக்கனின் சிலை ஜடாயுவின் சிலை என்று கருதபட்டிருக்கலாம்.  இவையெல்லாம் அறிஞர்களின் ஆராய்ச்சிக்குரியவை.

ஆழ்வார் பாசுரங்கள் இதோ.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் இரங்கல்

1114 அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு
      அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்
      போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லிக் கோமள வல்லி
      கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே             (8)


மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் 
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் 
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)

ஓம் நமோ நாராயணாய 

No comments:

Post a Comment