Friday, October 11, 2019

80. திவ்யதேச தரிசன அனுபவம் - 59. திருத்தேவனார்தொகை (33)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
33. திருத்தேவனார்தொகை
ஆர்க்கும் வலம்பரியா வண்டமு மெண்டிசையும்
கார்க்கடலும் வெற்புங் கலங்கினவால் - சீர்க்கும் 
திருத்தேவ னார்தொகைமால் செவ்வாய்வைத் தூதத்
தருத்தேவ னார்தொகையுஞ் சாய்ந்து (33)

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

மண்ணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள திவ்யதேசம் இது.

விஷ்ணு பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியை மணமுடித்த பின் வசிஷ்டருக்கு இங்கு காட்சி கொடுத்தார். தேவர்களும் பெருமாளை லக்ஷ்மியுடன் தரிசிக்கக்  கூட்டமாக இங்கு வந்தனர். தேவர்கள் மொத்தமாக இங்கு வந்ததால் இந்த திவ்யதேசம் தேவனார் தொகை என்று அழைக்கப் படுகிறது.

விஷ்ணுவுக்கும், லக்ஷ்மிக்கும் நடந்த திருமணத்தைக் குறிக்கும் வகையில் இங்குள்ள திருக்குளம் சோபன புஷ்கரணி என்றும், விமானம் சோபன விமானம் என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. (சோபனம் என்றால் திருமணம் என்று பொருள்.) தேவர்கள் இங்கு கூடியதைக் குறிக்கும் வகையில் புஷ்கரணிக்கு தேவசபா புஷ்கரணி என்ற பெயரும் விளங்குகிறது.

தேவர்களின் கடவுள் என்பதால் பெருமாள் தெய்வநாயகன் என்று அழைக்கப்படுகிறார். பாற்கடலிலிருந்து தோன்றியவர் என்பதால் தாயார் கடல் மகள் நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார்.

தாயாருக்குத் தனி சந்நிதி உள்ளது.

மூலவர்: தெய்வநாயகன்
நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்  \
பிரத்யக்ஷம்: வசிஷ்டர், ஏகாதச ருத்ரர்

உற்சவர்: மாதவப் பெருமாள் 

தாயார்: கடல்மகள் நாச்சியார்,
உற்சவர்: மாதவநாயகி

தீர்த்தம்: சோபன புஷ்கரணி. தேவசபா புஷ்கரணி,

விமானம்: சோபன விமானம்

தாயார் கடல்மகள் நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

இந்தக் கோவில் விமானத்தின் நிழல் விமானத்துக்குள்ளேயே விழுவது இந்தக் கோவிலின் சிறப்பு.

இந்த திவ்ய தேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் காணலாம்.



இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
நான்காம் பத்து

முதல் திருமொழி
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை
1. போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே. (1248)

2. யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்,
மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை
தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே. (1249)

3. வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,
ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே. (1250)

4. இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்,
எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே. (1251)

5. அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும்
உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல்,
திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே. (1252)

6. ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம்,
சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே. (1253)

7. ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம்,
ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே. (1254)

8. வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான்,
காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம்
ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே. (1255)

9. கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ
கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,
வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே. (1256)

10. காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம்,
சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல்
கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே. (1257)
|ஓம் நமோ நாராயணாய|

No comments:

Post a Comment