Wednesday, December 27, 2017

45. திவ்யதேச தரிசன அனுபவம் - 24 திருஉறையூர் (2)

தரிசனம் செய்த நாள் - 21/12/2017 (வியாழக்கிழமை)
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40
2. திருஉறையூர் (2)
சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போல‌
மறப்புடைய நாயேன் மனத்துள் - உறப்போந்
தறந்தையா நின்ற வரங்கா! திருவாழ்
உறந்தையாய்! இங்குறைந்த தோது! (2) 
                                          - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின்  '108 திருப்பதி  அந்தாதி  

திருச்சிராப்பள்ளி நகரின் மையப்பகுதியில்  ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

சோழ அரசன் நந்த சோழன் திருவரங்கப் பெருமானிடம் பிள்ளைப்பேறு வேண்ட, மகாலக்ஷ்மி ஒரு தாமரைக்கு குளத்தில் தோன்றி, அரசனின் மகளாக வளர்ந்தார்.

தாமரைக் குளத்தில் தோன்றியதால் இவருக்கு கமலவல்லி என்று திருநாமம் சூட்டப்பட்டது..திருமணப் பருவம் வந்ததும் ரங்கநாதரை மணக்க விரும்பினார். சோழ அரசனும் ரங்கநாதருக்குத் தன் மகளை மணமுடித்தான். திருமணத்துக்குப்பின் கமலவல்லி ரங்கநாதருடன் ஐக்கியமாகி விட்டார். இந்தத் திருமணத்தைக் கொண்டாடும் வகையில் சோழ மன்னன் இந்தக் கோவிலைக் கட்டினான் என்பது தல வரலாறு.

இந்தக் கோவில் துவாபர யுகத்தில் கட்டப்பட்டதாகவும், பிறகு கலியுகத்தில் இந்தக் கோவில் மண்ணில் புதைந்து விட்டதாகவும், நந்த சோழனின் வம்சத்தில் வந்த இன்னொரு சோழ அரசன்  இதைத் தோண்டி எடுத்துக் புதுப்பித்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.

ஒரு கோழி யானையை விரட்டி அடித்ததாக அமைந்த வரலாற்றின் அடிப்படையில் இந்த ஊருக்குக் கோழியூர் என்றும் பெயர் உண்டு. விசுளாபுரி என்ற பெயரும் உண்டு.

விஸ்தாரமான இந்தக் கோவிலில் மூலவர் அழகிய மணவாளன் என்ற பெயருடன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். அவருக்கு முன் கமலவல்லி நாச்சியார் திருமணக்கோலத்தில் மூலவராக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயாரின் உற்சவ மூர்த்தியும் அருகிலேயே சேவை சாதிக்கிறார்.

பெருமாளுக்கு இங்கே உற்சவ மூர்த்தி இல்லை, திருவரங்கத்து உற்சவ மூர்த்தியான நம்பெருமாள்தான் இந்தக் கோவிலுக்கும் உற்சவர். அவர் இந்தக் கோவிலுக்குப் பங்குனி உத்திரத்தின்போது எழுந்தருளி கமலவல்லி நாசத்தியாரைத் திருமணம் செய்து கொள்கிறார். கார்த்திகை மாதத்தில் திருப்பாணாழ்வார் உற்சவமும் உண்டு.

இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று தாயார் இந்தக் கோவிலில் உள்ள பரமபத வாசலைக் கடந்து செல்வார்.

பிரகாரத்தில் சேனை முதலியார் , நம்மாழ்வார், திருப்பாணாழ்வார், ராமானுஜர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இது திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலம். ராமானுஜரின் சீடர் பிள்ளை உறங்காவல்லிதாசர் வாழ்ந்ததும் இந்த ஊரில்தான்.

பிரகாரத்தில் மண்டபங்கள் உள்ளன. இங்கு தசாவதாரக் காட்சிகளும், கமலவல்லி நாச்சியாரின் வரலாறும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. சில ஓவியங்கள் சற்றே அழிந்து காணப்படுகின்றன.

விமானம் - கல்யாண விமானம்

தீர்த்தம் -  கமல புஷ்கரணி

பெருமாள் - அழகிய மணவாளர் (நின்ற திருக்கோலம்)

தாயார் - கமலவல்லி. உறையூர் வல்லி  என்றும் அழைக்கப்படுகிறார்.

தாயாரும் மூலஸ்தானத்திலேயே பெருமாளுடன் சேர்ந்திருக்கிறார். தாயாருக்கு தனிச் சந்நிதி இல்லை.

இந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் ஒவ்வொரு பாடலில் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

திருமங்கையாழ்வார் 
பெரிய திருமொழி 
ஒன்பதாம் பத்து 
இரண்டாம் திருமொழி 
5. கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன
பாழியும் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில் மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா.(1762)

குலசேகராழ்வார் 
பெருமாள் திருமொழி 
இரண்டாம் திருமொழி 
அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே. (667)

ஓம் நமோ நாராயணாய 

No comments:

Post a Comment