Thursday, October 24, 2013

3. மஹாவிஷ்ணுவின் ஐந்து நிலைகள்

மஹாவிஷ்ணுவுக்கு ஐந்து நிலைகள் உண்டு.
பரம்
வியூஹம்
விபவம்
அந்தர்யாமி
அர்ச்சம்

முதல் நிலையான பரம் என்பது பரமபதம், வைகுண்டம், மோட்சம், நித்ய விபூதி  என்றெல்லாம் அழைக்கப்படும் நிலை. இது எல்லா உலகங்களையும் கடந்த ஓர் வெளியில் அமைந்துள்ளது. இங்கே மஹாவிஷ்ணு பரவாசுதேவன் என்ற பெயரில் விளங்குகிறார். 

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதி சேஷனை இருக்கையாகக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவியருடனும், நித்யசூரிகள் என்று அழைக்கப்ப்படும் அமரநிலை அடைந்தவர்களுடனும் விளங்குகிறார்.

நித்யசூரிகளில் அஷ்ட திக் பாலர்கள் (எண்திசைக்காவலர்கள்), 8 துவாரபாலகர்கள் (வாயில் காப்போர்கள்), விஷ்வக்சேனர் முதலியோர் அடங்குவர்.

மண்ணுலக  வாழ்க்கை முடிந்து வைகுண்டம் அடையும் பேறு பெற்றவர்கள்  வந்து சேரும் இடம் இதுதான்.

பகவானுக்கு ஆறு குணங்கள் உண்டு.(ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவப்படி பரம்பொருள் குணங்கள் அற்றவர் - நிர்க்குணப் பிரம்மம் என்று கருதப்படுகிறார். ஆனால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவப்படி பகவான் கல்யாண குணங்கள் எனப்படும் உயர்ந்த குணங்களைக் கொண்டவர்.)

1) ஞானம் - எல்லாம் அறிந்திருத்தல்
2) ஐஸ்வர்யம் - எல்லாச் செல்வங்களையும் தன்னிடம் கொண்டிருத்தல்
3) சக்தி - எதையும் செய்யக் கூடிய ஆற்றல்
4) பலம் - எல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்கும் (காக்கும்) வலிமை
5) வீரியம் - சக்தி சிறிதும் குன்றாத தன்மை
6) தேஜஸ் - தன்மயமான,  முழுமையான நிலை மற்றும் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் தெய்வாம்சம்.

பர வாசுதேவர் இந்த ஆறு குணங்களையும் தன்னிடம் கொண்டவராக விளங்குகிறார்.

இரண்டாவது நிலை வியூஹம். இங்கே பகவானுக்கு நான்கு உருவங்கள் உண்டு. வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற பெயர்களுடன் இவர்கள் முறையே கிழக்கு,தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு திசைகளை நோக்கி உள்ளனர்.

வியூஹ வாசுதேவன் பர வாசுதேவன்தான்.
வியூஹ வாசுதேவனிடமிருந்து அறிவு, பலம்  என்ற இரண்டு குணங்களைப் பெற்று சங்கர்ஷணர் விளங்குகிறார். அறிவைக்கொண்டு அவர் சாஸ்திரங்களை உருவாக்குகிறார். பலத்தைக்கொண்டு பிரளய காலத்தில் உலகின் அழிவுக்கு வழி வகுக்கிறார்.

சங்கர்ஷணரிடமிருந்து ப்ரத்யும்னரும், ப்ரத்யும்னரிடமிருந்து அநிருத்தரும் உருவாகிறார்கள். ப்ரத்யும்னர் வீரம், வீரியம் (ஆற்றல்)  என்ற இரு குணங்களைக்கொண்டு எல்லா உலகங்களையும் உருவாக்கி, அங்கே தர்மம் நிலைபெறச் செய்கிறார்.

ப்ரத்யும்னரிடமிருந்து அநிருத்தர் உருவாகி, சக்தி, தேஜஸ் என்ற இரு குணங்களைக் கொண்டவராக விளங்குகிறார். உலகைக் காத்தல், அறநெறிகளையும், உண்மைகளையும் போதித்தல் என்ற இரு பணிகளுக்குக் காரணராக விளங்குகிறார்.

இவற்றைக் கோர்வையாகப் பார்க்கும்போது, படைத்தல், காத்தல், அழித்தல், உலகில் தர்மம் நிலை பெறச் செய்தல் ஆகியவற்றை பகவான் விஷ்ணு செயல் படுத்துகிறார் என்று விளங்கும். சங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்ற மூன்று வடிவங்களில் இந்தப் பணிகளைச் செய்கிறார் என்பதும், குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப  ஒவ்வொருவரும் இரண்டு குணங்களைச் சுவீகரித்துக்கொண்டு செயல்படுகிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள எல்லாவற்றையும் ப்ரக்ருதி, மஹத், அகங்காரம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

ப்ரக்ருதி என்பது புலன்களால்  அறியப்படுபவற்றைக் குறிக்கும். நம் உடல், நிலம், நீர், காற்று போன்றவை ப்ரக்ருதி என்ற வகையில் அடங்கும்.

உலகில் நம் கண்ணுக்குப் புலப்படாமல் செயல்படும் சக்திகள் மஹத் என்று அறியப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை, இயற்கை விதிகள், அற நெறிகள் போன்றவற்றை மஹத் என்று கூறலாம்.

மூன்றாவது அகங்காரம். இது தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

சங்கர்ஷணர் ப்ரக்ருதிக்கும், ப்ரத்யும்னர் மஹத்துக்கும், அநிருத்தர் அகங்காரத்துக்கும் பொறுப்பு வகிக்கின்றனர்.

மஹாவிஷ்ணுவின் மூன்றாவது நிலை விபவம்.  விபவம் என்பது பகவானின் அவதாரங்களைக் குறிக்கும்.

முதல் இரண்டு நிலைகள் நம்மால் அணுக முடியாதவை. நாம் அணுக முடியாத நிலையில் பகவான் இருப்பதில் நமக்கும் பயனில்லை, அவருக்கும் பயனில்லை! ஆகவேதான் நம்முடன் நெருக்கமாக இருக்கும் பொருட்டு இவ்வுலகில் அவதரித்தார் விஷ்ணு.

'அவதாரம்' என்ற சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு 'இறங்கி வருதல்' என்று பொருள். நம்மால் அணுக முடியாத நிலையில் இருக்கும் கடவுள் நம் மீதுள்ள கருணையால் கீழே இறங்கி இவ்வுலகில் அவதரிக்கிறார்.

விஷ்ணுவின் அவதாரங்கள் மொத்தம் பத்து. இதுவரை அவர் எடுத்துள்ள அவதாரங்கள் ஒன்பது. பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தைக் கலியுக முடிவில் எடுப்பார்

நான்காவது நிலை அந்தர்யாமி. நம் அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக பகவான் விளங்குவதுதான் அந்தர்யாமி என்ற நிலை. ஆம். கடவுளைத் தேடி நாம் வெளியே எங்கும் போக வேண்டியத்டில்லை. அவர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

நம் உடலுக்குள் உயிர் இருக்கிறது. அதுபோல் உயிருக்கு உயிராக இருப்பவர் பகவான் விஷ்ணுதான் - அந்தராத்மாவாக. வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா.

நமக்குள் அந்தர்யாமியாக பகவான் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டால், நம் வாழ்க்கை ஆனந்தமயமாக ஆகி விடும்.

ஐந்தாம் நிலை அர்ச்சம் என்று அழைக்கபடுகிறது. இவ்வுலகில் பல திருத்தலங்களில் விக்கிரக வடிவில் இருந்து பகவான் நமக்கு அருள் புரிவதைத்தான் அர்ச்சம் என்ற நிலை குறிக்கிறது. எல்லோரும் எளிதாக வணங்கி மகிழும் நிலை அர்ச்சம். அவதார காலங்களில் வாழும் வாய்ப்பு இல்லாத நமக்கு பகவானை தரிசித்து மகிழும் வாய்ப்பை அர்ச்சம் வழங்குவதால், பகவானின் இந்நிலை  அர்ச்சாவதாரம் என்று வழங்கப் படுகிறது.

Sunday, October 20, 2013

2. திருமால் வழிபாடு

உலகில் பல மதங்கள் உண்டு. அவற்றை உருவாக்கியவர்களைப் பற்றிய வரலாறு உண்டு. 

எவராலும் படைக்கப்படாமல் இயல்பாகத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் நிலவி வரும் மதம் இந்து மதம்,

இந்து மதம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. ஒருவன் இந்துவாக "மாறுவதற்கு" எந்த விதச் சடங்குகளும் தேவையில்லை. மத மாற்றச் செயல்களில் ஈடுபாடும் குருமார்களும் இல்லை.

எவர் வேண்டுமானாலும் தன்னை இந்து என்று கருதிக் கொள்ளலாம். கோவிலுக்குப் போயோ, கீதை படித்தோ, பண்டிகைகளைக் கொண்டாடியோ தன்னை இந்து என்று நிரூபிக்க வேண்டியதில்லை.

இந்து மதத்தில் பல பிரிவுகள் உண்டு என்று சிலர் கூறுவார்கள். இவை பிரிவுகள்அல்ல, வழிபாட்டு முறைகள்.

இந்து மத வழிபாட்டு முறைகள்  ஆறு வகையானவை என்று வகுத்திருக்கிறார் ஆதிசங்கரர்.

1. சைவம் (சிவபெருமானை வழிபடுவது)
2, வைணவம் (திருமால் வழிபாடு)
3. சாக்தம் (சக்தி வழிபாடு)
4. காணபத்யம் (விநாயகரை வழிபடுவது)
5. கௌமாரம் (முருகனை  வழிபடுவது)
6. ஸௌர்யம் (சூரிய வழிபாடு)

ஆதிசங்கரர் பல தெய்வங்களைப் பற்றியும் சுலோகங்கள் எழுதியிருந்தாலும், தன மனதில் திருமாலுக்கு மிக உயர்வான இடம் கொடுத்திருந்தார் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அவர் காசியில் இருந்தபோது தெருவில் நடந்து சென்ற சில பண்டிதர்கள் ஒரு கடினமான இலக்கண விதியைப் பற்றி  விவாதித்துக் கொண்டே சென்றனர். 

ஆதிசங்கரர் அவர்களை நிறுத்தி, 'கோவிந்தனைத் துதியுங்கள். உங்கள் இறுதிக் காலத்தில் இந்த இலக்கண அறிவு உங்களுக்குத் துணை நிற்காது' என்று கூறி 'பஜ கோவிந்தம்' என்று திருமாலின் மீது ஒரு அற்புதமா சோஸ்திரத்தை இயற்றினார்.

ஒருமுறை அவர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து இறந்து போன ஒரு அரசனின் உடலுக்குள் புகுந்திருந்தபோது அவரது மதக் கருத்துக்களை ஏற்காத காபாலிகர்கள் என்ற மதத் தீவிரவாதிகள் அவரது உடலைக் கொளுத்த முயன்றனர். 

அப்போது ஆதிசங்கரர் அடைக்கலம் தேடியது திருமாலின் அவதாரங்களில் ஒருவரான நரசிம்மரைத்தான். நரசிம்மரை  தியானித்து "லக்ஷ்மி நரஸிம்ஹ கராவலம்பம்'" என்ற ஸோஸ்திரத்தைப் பாடினார். நரசிம்மரின் அருளால் எரிந்து போன அவரது உடல் மீண்டும் முழுமை பெற்றது.

அவரது தாய் மரணப் படுக்கையில் இருந்தபோது  தன் அன்னை மோட்சம் அடைவதற்காகத்   திருமாலைக் குறித்து அவர் அருளிய துதி இது.

"வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீச நந்தகி
ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது."

'வனமாலி என்ற மாலையை அணிந்து சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் வில் ஆகியவற்றுடன் விளங்கும் திருமால்  என்னைக் காக்க வேண்டும்' என்ற பொருள் கொண்ட இந்தத் துதியைக் கேட்டபடியே உயிர் துறந்தார் அவர் தாய்.

இந்தச் செய்யுள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், விஷ்ணுவின் ஆயிரத்தெட்டு நாமங்களும் முடியும் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் எழுதியுள்ள இன்னொரு ஸ்லோகம் இது.

"ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி."

'விண்ணிலிருந்து விழும் தண்ணீர் எல்லாம் கடலைத்தான் சென்றடையும். அதே போல நாம் எந்தக் கடவுளை வழிபட்டாலும், அது கேசவனைதான் (திருமாலைத்தான்) சென்றடையும்.' என்பது இதன் பொருள். கேசவன் என்பது திருமாலின் பன்னிரு திருநாமங்களில் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

ராமானுஜரைப் போல் ஆதிசங்கரர் ஒரு வைணவ ஆச்சார்யராகக் கருதப்படாவிட்டாலும், அவர் திருமால் வழிபாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை மேற்கண்ட உதாரணங்களிலிருந்து அறியலாம்.

எந்த ஒரு செயலையும் துவங்குமுன் 'இந்தச் செயல் திருமாலின் விருப்பத்தினால், திருமாலுக்காகத் திருமாலாலேயே செய்யப்படுகிறது' என்று சொல்லித் துவங்குவது வைணவ மரபு.

அதுபோல,  இந்தப்  பதிவும் திருமாலின் விருப்பத்தினால், திருமாலுக்காகத் திருமாலாலேயே செய்யப்படுகிறது என்று கூறி இந்த வலைப் பதிவைத் தொடர்கிறேன்.

Monday, October 14, 2013

1. வைணவம் - இத்தொடர் பற்றி ஓர் அறிமுகம்

தமிழில் திருமால் என்று அழைக்கப்படும் மஹாவிஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கருதி வழிபடும் நெறிமுறை  வைணவம்.

வைணவத்தைப் பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்ததால் நான் ஒரு வைணவன். 

மற்றபடி  என் மதம், என் இனம், என் மொழி, என் தேசம் ஆகியவைதான் உலகத்தில் உயர்ந்தவை  என்று கருதுவது சரியல்ல என்பது என் பணிவான கருத்து.

ஆயினும், நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம் மிக உயர்ந்தது என்று கருதுவது மனித இயல்பு. 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்று பாடினார் பாரதியார். 'தேசங்களில் சிறந்தது இங்கிலாந்து' என்று ஷேக்ஸ்பியர் கருதியிருக்கக் கூடும்!

நாம் பிறந்த நாடு, நம் மொழி, நம் மதம், நம் இனம் போன்றவற்றைப் பற்றிப் பெருமை கொள்வதில் தவறில்லை. 

இந்தப் பெருமைகளை நாம் கூறிக் கொள்ளும்போது மற்றவர்களின் இனம், மதம், மொழி, நாடு போன்றவை நம்முடையவற்றை விட சற்றே குறைந்தவை என்ற கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். 

எனவே இங்கே இடம் பெறும் கட்டுரைகள் திருமால் பெருமையைப் பேசும்போது, அது மற்ற தெய்வங்களைக் குறைத்துப் பேசுவதாக ஆகாது.

நான் ஒரு அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருந்தபோது அங்கே என் இருக்கைக்கு அருகே ஒரு முதியவர் பணி புரிந்து வந்தார். 

ஒருமுறை, ஒரு சக ஊழியர், அந்த முதியவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பணி புரிந்து வந்த ஒருவரைக் குறிப்பிட்டு "அவர் நிறைய விஷயம் தெரிந்தவர்" என்றார். உடனே முதியவர், "அப்படியானால் நான் விஷயம் தெரியாதவனா?" என்று சண்டைக்கு வந்து விட்டார்.

'திருமால் பெருமைக்கு நிகரில்லை' என்று சொன்னால் இது மற்ற தெய்வங்களின் பெருமையைக் குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது. 

இந்தக் கட்டுரைகளில் வைணவத்தைப் பற்றி மட்டுமே எழுதப் போகிறேன். இதை மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

விஜயதசமி தினமான இன்று வைணவத்தின் பெருமைகளைப் பேசும் இந்த வலைப் பதிவை துவங்குகிறேன். 

இந்தத் தொடர் சீராகவும், சிறப்பாகவும் வெளி வர, நான் வணங்கும் திருமாலின் அருளும், திருமால்  பெருமையைப் பாடிய ஆழ்வார்களின் அருளும், திருமால் பெருமையைப் பறை சாற்றிய ராமானுஜரின் கருணையும், அவரைத் தொடர்ந்து வந்த ஆசாரியர்களின் ஆசியும், அமரர்களாகி விட்ட என் தாய் தந்தையரின் ஆசியும், எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் தொடரைப் படிக்கப் போகும் வலை வாசகர்களின் ஆதரவும், ஊக்கமும் துணை நிற்கும் என்று நம்புகிறேன்.

இந்தத் தொகுப்பில் நான் எழுத எண்ணியிருக்கும் விஷயங்கள் வைணவத்தைப் பற்றிய ஒரு அறிமுகமாகவும் ஆரம்பப் பாடமுமாகவுமே இருக்கும். 

வைணவ மதத் தத்துவங்களை விளக்கும் ஆழமான கட்டுரைகளை நான் எழுதப் போவதில்லை. அதற்கான புலமையோ ஆராய்ச்சி அறிவோ என்னிடம் இல்லை. 

வைணவம் பற்றி ஆழ்ந்த ஞானம் பெற்றுள்ள அறிஞர்கள் யாராவது இந்த வலைப் பதிவைப் படிக்க நேர்ந்தால் இது ஒரு எளியவனால் வைணவம் பற்றி அறிய விரும்பும் எளிய மனிதர்களுக்காக எழுதப் பட்டது என்பதை மனதில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பதிவின் காணொளி வடிவம் இதோ:


ஓம் நமோ நாராயணாய!