Wednesday, April 17, 2019

71. திவ்யதேச தரிசன அனுபவம் - 50. திருச்சாளக்கிராமம் (முக்திநாத்) (100)

தரிசனம் செய்த நாள்: 08.04.2019  திங்கட்கிழமை.   
 வட நாட்டுத் திருப்பதிகள் - 12
4. திருச்சாளக்கிராமம் (5)


5. திருச்சாளக்கிராமம்
உண்டா முறைமை யுணர்ந்தடிமைப் *பேர்புண்டேன்
பண்டாங் குடிகுலத்தாற் பன்மதத்தால் - கொண்டாட்டால்
ஆளக் கிராமத்தா லல்லற்பேர் பூணாமல்
சாளக் கிராமத்தார் தாட்கு. (100)

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108திருப்பதி அந்தாதி .

முக்திநாத் கோவில் என்று அழைக்கப்படும் சாளக்கிராமம் நேபாளத்தில் அன்னபூர்ணா தௌலகிரி மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து 3710 மீட்டர் (12170 அடி) உயரத்தில் உள்ளது.

தானே உருவான 8 ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் (ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், தோத்தாத்ரி (வானமாமலை), புஷ்கர், பத்ரிநாத் இவை மற்ற 7 க்ஷேத்திரங்கள்)  சாளக்கிராமம் ஒன்று. 

இப்போது கோவில் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாமோதர குண்ட் என்ற கண்டகி நதி துவங்கும் இடத்தில் இந்தக் கோவில் இருந்ததென்றும், அங்கு செல்வது மிகவும் கடினம் என்பதால், விக்கிரகம் இங்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

கண்டகி நதிக்கரையில் உள்ள இந்த திவ்ய தேசம் சாளக்கிராமக் கற்களுக்குப் பெயர் பெற்றது. கண்டகி நதியில் உருவாகும் சாளக்கிராமக் கற்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. இவற்றின் தோற்றத்தைக் கொண்டு இவை நரசிம்மர், வராஹர், விஷ்ணு, ஹயக்ரீவர், சந்தான கோபாலன், மத்ஸயர், கூர்மர், சுதர்சனர்  போன்ற விஷ்ணுவின் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பவையாகக் கருதப்பட்டு பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்படுகின்றன.

முக்திநாத், காத்மாண்டு, போக்ரா, ஜோம்சோம் போன்ற ஊர்களை, இந்தியாவில் பல இடங்களிலும் கூட இந்த சாளக்கிராமங்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை 20 ரூபாயிலிருந்து பல ஆயிரம் ரூபாய்கள் வரை இருக்கலாம். சாளக்கிராமங்கள் பற்றி நன்கு அறிந்தவர்களின் ஆலோசனைப்படி இவற்றை வாங்குவது உத்தமம்.

சில சாளக்கிராமங்களின் வடிவமைப்புகள் ஒரு கை தேர்ந்த சிற்பியாழ் அற்புதமாக உருவாக்கப்பட்டவை போல் பிரமிப்பூட்டும் விதத்தில் உள்ளன. இவற்றை இயற்கையின் அதிசயம் அல்லது தெய்வீகத்தின் வெளிப்பாடு என்றுதான் கொள்ள வேண்டும்.

கண்டகி நதி விஷ்ணுவிடம் அவர் தன் கர்ப்பத்தில் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் விஷ்ணு பூச்சியாக உருவெடுத்து கண்டகி நதியின் உள்ளே இருக்கும் கற்களைக் குடைந்து தன பல்வேறு தோற்றங்களை உருவாக்குகிறார். இவையே சாளக்கிராமக் கற்கள். 

முக்திநாத் கோவிலுக்குச் செல்வது சற்று சிரமமான செயல். இது பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன். 

கோவிலுக்குச்  சென்றதும் பாப் குண்ட்  (பாவக் குளம்), புண்ய குண்ட் (புண்ய
வலது - பாப் குண்ட், இடது - புண்ய குண்ட்  
குளம்) என்ற இரண்டு குளங்களில் முறையே நீராட வேண்டும். இவை சிமென்ட்௩ தொட்டிகள்தான். இவற்றில் நீர் தொடர்ந்து நிரப்பப்படுகிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று தெரியவில்லை. 












இந்த இரண்டு குளங்களில் நீராடியபின், சுவற்றில் உள்ள 108 துவாரங்கள் வழியே காளை மாட்டின் தலை வடிவில் உள்ள குழாய்கள் மூலம் வரும் நீரை ஒவ்வொரு தலை அடியிலும் நின்று வரிசையாக த் தலையில் ஏந்தி  நீராடலை நிறைவு செய்த பின் வேறு உடை உடுத்திக்கொண்டு பெருமாளை தரிசிக்கலாம்.

உடை மாற்றிக்கொள்ள இடங்கள் உள்ளன.   

முக்திநாத் சந்நிதி சிறியதாக ஒரு மாடம் போல் உள்ளது. பெருமாளை மிக அருகில் (சுமார் 3 அடி தூரத்திலிருந்து சேவிக்கும் பேறு) இங்கு கிடைப்பது ஒரு அற்புத அனுபவம்.

சில கோவில்களுக்குப் பெண்கள் வரவே கூடாது என்று சிலர் வாதிட்டு வரும் நிலையில், இங்கு ஒரு பெண்மணியே அர்ச்சகராக இருப்பது ஒரு மன நிறைவான ஆச்சரியம்.

சன்னதியின் வாயிலில் அமர்ந்தபடி  முக்திநாத், லட்சுமி, சரஸ்வதி, கருடன், யமுனாச்சாரியா என்று சந்நிதியில் இருப்பவர்கள் பெயர்களை ஒவ்வொருவரிடமும் பொறுமையாகச் சொல்லி, நாம் கேட்டால் மீண்டும் ஒரு முறை சொல்லி, சடாரி வைத்து  ஒரு சில நேபாளி நாணயங்களையும் கொடுக்கிறார். (இது புத்தர்களுக்கும் புனிதமான இடம். இந்தக் கோவில் புத்தர்களால் நிர்வகிக்கப்பட்டு புத்த முறையில் பூஜை செய்யப்படுகிறது. அர்ச்சகப் பெண்மணி புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும்.)

இந்தக் கோவிலில் நீர், நிலம், நெருப்பு, வெளி, வாயு  என்ற பஞ்சபூதங்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. சந்நிதிக்கு எதிரே ஒரு ஹோம குண்டத்தில் ஹோமத்தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. இது நெருப்பு. மற்ற நான்கு பூதங்கள் இயற்கையாகவே இங்கு இருக்கின்றன.

மூலவர் - முக்திநாத், ஸ்ரீமூர்த்தி. சாளக்கிராம விக்கிரகம். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

பிரத்யட்சம் - பிரம்மா, ருத்ரன்,  கண்டகி 

தாயார் - ஸ்ரீதேவி நாச்சியார் 

விமானம் - கனக விமானம் 

புஷ்கரணி - கண்டகி நதி, சக்ர தீர்த்தம் 

பெருமாள் சந்நிதிக்கு எதிரே உள்ள ஹோமகுண்டத்துக்கு அருகில் ராமானுஜர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆகியோர் விக்கிரகங்கள் உள்ளன. 


கோவிலிருந்து கீழே இறங்கி வரும்போது, வலப்புறமாக சற்றுத் தள்ளி ஒரு நரசிம்மர் சந்நிதி உள்ளது. இங்கு பல சாளக்கிராமங்கள் உள்ளன. 























முக்திநாத் கோவில் பற்றிய இந்த வீடியோக்களை பாருங்கள் 




இந்தக் கோவில் திருமங்கை ஆழ்வார் (10 பாசுரங்கள்) மற்றும் பெரியாழ்வார் (2 பாசுரங்கள்) ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கிறது. திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகியோர் இங்கே வந்திருக்கிறார்கள்.

பாசுரங்கள் இதோ:
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருச்சாளக்கிராமம்
1. கலையும் கரியும் பரிமாவும் 
      திரியும் கானம் கடந்துபோய் 
சிலையும் கணையும் துணையாகச் 
      சென்றான் வென்றிச் செருக்களத்து 
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி 
      மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் 
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (987)
 
2. கடம் சூழ் கரியும் பரிமாவும் 
      ஒலி மாத் தேரும் காலாளும் 
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை 
      பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்- 
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் 
      இமையோர் வணங்க மணம் கமழும் 
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (988)
 
3. உலவு திரையும் குல வரையும் 
      ஊழி முதலா எண் திக்கும் 
நிலவும் சுடரும் இருளும் ஆய் 
      நின்றான் வென்றி விறல் ஆழி 
வலவன் வானோர்-தம் பெருமான் 
      மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் 
சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (989)
 
4. ஊரான் குடந்தை உத்தமன் 
      ஒரு கால் இரு கால் சிலை வளையத் 
தேரா அரக்கர் தேர்-வெள்ளம் 
      செற்றான் வற்றா வரு புனல் சூழ் 
பேரான் பேர் ஆயிரம் உடையான் 
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற 
தாரான்-தாரா வயல் சூழ்ந்த 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (990)
 
5. அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு 
      அலற அவள் மூக்கு அயில் வாளால் 
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி 
      விண்ணோர் பெருமான் நண்ணார்முன் 
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் 
      கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் 
தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (991)
 
6.  தாய் ஆய் வந்த பேய் உயிரும் 
      தயிரும் விழுதும் உடன் உண்ட 
வாயான் தூய வரி உருவின் 
      குறளாய்ச் சென்று மாவலியை 
ஏயான் இரப்ப மூவடி மண் 
      இன்றே தா என்று உலகு ஏழும் 
தாயான் காயா மலர் வண்ணன்-
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (992)
 
7.  ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் 
      அரி ஆய் பரிய இரணியனை 
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த 
      ஒருவன் தானே இரு சுடர் ஆய் 
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய் 
      மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும் 
தான் ஆய் தானும் ஆனான்-தன் 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (993)
 
8.  வெந்தார் என்பும் சுடு நீறும் 
      மெய்யில் பூசி கையகத்து ஓர் 
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் 
      திரியும் பெரியோன்-தான் சென்று என் 
எந்தாய் சாபம் தீர் என்ன 
      இலங்கு அமுது நீர் திருமார்வில் 
தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (994)
 
9.  தொண்டு ஆம் இனமும் இமையோரும் 
      துணை நூல் மார்வின் அந்தணரும் 
அண்டா எமக்கே அருளாய் என்று 
      அணையும் கோயில் அருகு எல்லாம் 
வண்டு ஆர் பொழிலின் பழனத்து 
      வயலின் அயலே கயல் பாயத் 
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (995)
 
10. தாரா ஆரும் வயல் சூழ்ந்த 
      சாளக்கிராமத்து அடிகளை 
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் 
      கலியன் ஒலிசெய் தமிழ்மாலை 
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார் 
      அமரர் நல் நாட்டு அரசு ஆளப் 
பேர் ஆயிரமும் ஓதுமின்கள் 
      அன்றி இவையே பிதற்றுமினே (996)

முதலாயிரம் 
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து
ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
5. பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப் 
பல்வளையாள்என்மகளிருப்ப 
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று 
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் 
சாளக்கிராமமுடையநம்பி 
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் 
ஆலைக்கரும்பின்மொழியனைய 
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (206) 

நான்காம் பத்து 
ஏழாம் திருமொழி - தங்கையை மூக்கும்
9. வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி 
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை 
தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி 
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. (399)

ஓம்  நமோ நாராயணாய 







Tuesday, April 16, 2019

70. திவ்யதேச தரிசன அனுபவம் - 49. திருவயோத்தி (98)

தரிசனம் செய்த நாள்: 05.04.2019  வெள்ளிக்கிழமை.   
 வட நாட்டுத் திருப்பதிகள் - 12
4. திருஅயோத்தி 

அம்மாஜி மந்திர் 

3. திருவயோத்தி
ஆர்க்குமிது நன்றுதீ தானாலு நெஞ்சே!நீ
பார்க்கும் பலகலையும் பன்னாதே - சீர்க்கும்
திருவையோத் திப்பயலைச் சீரியமெய்ஞ் ஞானத்
துருவையோத் திற்பொருளை யோர். (98)
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108திருப்பதி அந்தாதி .

ராமபிரான் அவதரித்த இடம் அயோத்தி.

பிரம்மா உலகைப் படைத்தபோது, விஷ்ணு வைகுண்டத்தில் ஒரு பகுதியை அவருக்குக்  கொடுத்தார். பிரம்மா அந்தப் பகுதியை உலகின் ஒரு பகுதியாக உருவாக்கித் தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்கு கொடுத்தார். அதுதான் அயோத்தி. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இக்ஷ்வாகு. இவர் பெயரில் உருவான இக்ஷ்வாகு வம்சத்தில் தசரதரின் மகனாகப் பிறந்தவர் ராமர்.

பிரம்மா  விஷ்ணுவை நினைத்துத் தவம் செய்தார். அவருக்கு விஷ்ணு காட்சியளித்தார். பிரம்மாவின் பக்தியால் விஷ்ணு மனம் உருகிக்  கண்ணீர் மல்க நின்றார். அவர் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை பிரம்மா ஒரு கமண்டலத்தில் ஏந்தி அதை பூமியில் விட்டார். அந்த இடம் மானசரஸ் என்ற ஏரியாகியது.

பிற்காலத்தில், இக்ஷ்வாகுவின் வேண்டுகோளை ஏற்று, வசிஷ்டர் மானசரஸ்  நீரை அயோத்தியில் சரயு என்ற நதியாக ஓடச் செய்தார்.

முக்தி அளிக்கும் ஏழு தலங்களான அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி) இவற்றில் அயோத்தியே முதன்மையானது.

லக்னோவிலிருந்து 135 கிலோமீட்டரில், சரயு நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் அற்புததத் தலம் அயோத்தி. அயோத்தியில் பல ராமர் கோயில்கள் இருக்கின்றன. ஆயினும் ஆழ்வார்கள் பாடிய கோவில் இப்போது இல்லை என்றுதான் தோன்றுகிறது.

யோகி பார்த்தசாரதி யோகி சிங்காரம்மா தம்பதியால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அம்மாஜி மந்திர்  என்ற கோவில்தான் திவ்ய தேசக் கோவிலாகக் கருதப்படுகிறது. அம்மாஜி என்பது சிங்காரம்மாவைக் குறிப்பிடுகிறது. அம்மாஜி மந்திர் கட்டப்பட்டுள்ள இடத்தில்தான் ஆழ்வார்களால் பாடப்பட்ட ராமர் கோவில் அமைந்திருந்தது என்ற ஒரு கருத்து உண்டு. அதனாலேயே அம்மாஜி மந்திர் இப்போது திவ்ய தேசமாகக் கருதப்படலாம்.

அம்மாஜி  மந்திர் 
ராமஸ்வாமி கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலில் லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருடன் ராமர் எழுந்தருளி இருக்கிறார்.

கர்ப்பகிருஹத்துக்கு இடப்புறமாக இன்னொரு சந்நிதியில் ரங்கநாதர், ஆழ்வார்கள் இருக்கிறார்கள்.

மூலவர்: ஸ்ரீ ராமர், சக்ரவர்த்தித்த திருமகன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்: சீதாப் பிராட்டி

விமானம்: புஷ்பகலா விமானம்

புஷ்கரணி: பரமபத புஷ்கரணி, சரயு, நாகேஸ்வர தீர்த்தம், வைதேஹ்ய தீர்த்தம், சூரிய தீர்த்தம், ரத தீர்த்தம்

பிரத்யக்ஷம் (காட்சி பெற்றவர்கள்): பரதன், தேவர்கள், முனிவர்கள்

அயோத்தியில் உள்ள இன்னும் பல முக்கியமான கோவில்களையும் இடங்களையும் பற்றி வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அயோத்தி ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் - 6 பாசுரங்கள்
குலசேகராழ்வார் - 4 பாசுரங்கள்
தொண்டரடிப் பொடியாழ்வார் - 1 பாசுரம்
திருமங்கை ஆழ்வார் - 1 பாசுரம்
நம்மாழ்வார் - 1 பாசுரம்
மொத்தம் 13 பாசுரங்கள்

பாசுரங்கள் இதோ:
முதல் ஆயிரம் 
பெரியாழ்வார் 
பெரியாழ்வார் திருமொழி 
உந்தி பறத்தல்
6. முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (311)
 
7. காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்-வலி வீரமே பாடிப் பற
 தூ மணிவண்ணனைப் பாடிப் பற (312)
 
8. தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (313)
 
10.  காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
 அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (315)

முதல் ஆயிரம் 
பெரியாழ்வார் 
பெரியாழ்வார் திருமொழி 
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம் 
4. வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் (320) 

8. மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே (324)

முதல் ஆயிரம் 
பெரியாழ்வார் 
பெரியாழ்வார் திருமொழி 
கண்டம் என்னும் திருப்பதி
9. வட திசை மதுரை சாளக்கிராமம்
      வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
      தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே (398)

முதல் ஆயிரம் 
குலசேகராழ்வார் 
பெருமாள் திருமொழி
தாலாட்டு
6. சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ (723)
 
7. ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (724)

 முதல் ஆயிரம் 
குலசேகராழ்வார் 
பெருமாள் திருமொழி
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்
1.740 அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
      அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
      விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
      என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (740)

8. அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
      அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
      உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
      பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே (747)

முதல் ஆயிரம் 
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் 
திருப்பள்ளி எழுச்சி
4. மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
      வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
      இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
      மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (919)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
குழமணிதூரம்
8. கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே (1874)

நான்காம் ஆயிரம் 
நம்மாழ்வார் 
திருவாய் மொழி 
ஏழாம் பத்து 
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்

1. கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (3488)

ஓம் நமோ நாராயணாய 








Monday, April 15, 2019

69. திவ்யதேச தரிசன அனுபவம் - 48. நைமிசாரண்யம் (99)

தரிசனம் செய்த நாள்: 04.04.2019 வியாழக்கிழமை.   
 வட நாட்டுத் திருப்பதிகள் - 12
4. திருநைமிசாரணியம்
தேவராஜப்  பெருமாள் கோவில் 

4. திருநைமிசாரணியம்
ஓரறிவு மில்லாத வென்போல்வார்க் குய்யலாம்
பேரறிவுண் டேனும் பிறர்க்கரிது - பாரறிய
நைம்மிசா ரண்ணியத்து நாதரடி யாரோடும்
இம்மிசார் வுண்டாயி னால். (99)
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108திருப்பதி அந்தாதி 

நைமிசாரண்யம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோவிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும், சீதாபூரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் விஷ்ணுவின் 8 ஸ்வயம்வக்ஷ (தானே அமைந்த) க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. (ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம் (முக்திநாத்), தோத்தாத்ரி (வானமாமலை), திருப்பதி, புஷ்கர், பத்ரி இவை மற்றவை)

9 தபோவனங்களில் (தவம் செய்ய ஏற்ற இடங்கள்) ஒன்றாகவும் இந்தத் தலம் கருதப்படுகிறது. (தண்டகாரண்யம், சைந்தவாரண்யம், ஜம்புகாரண்யம், புஷ்கரராண்யம், உத்பலாரண்யம், பத்ரிகாரண்யம், குருஜங்களாரண்யம், அற்புதாரண்யம் ஆகியவை  மற்றவை.)

நைமிசாரண்யம் என்ற பெயரை நைமிச ஆரண்யம் என்று பிரிக்கலாம். நேமி என்றால் சக்கரம், ஆரண்யம் என்றால் காடு. இந்த இடம்  ஒரு காடாக இருந்தது. இங்கு திருமால் காடு வடிவமாகவே இருப்பதாக ஐதீகம், இப்போது இது மரங்கள் கூட அதிகம் இல்லாமல் ஒரு நவீன நகரமாகக் காட்சி அளிக்கிறது. இந்த ஊர் நிம்சார் அல்லது நிம்கார் என்றும் அழைக்கப்படுகிறது.

நைமிசம் என்பது ஒருவகைப் புல். நைமிசம் என்ற புள் அடர்ந்த காட்டு என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஒரு முறை சௌனகர் முதலான முனிவர்கள் பிரம்மாவிடம் சென்று பூவுலகில் தவம் செய்ய மிகவும் சிறந்த இடம் எது என்று கேட்க, பிரம்மா ஒரு தர்ப்பையை எடுத்து அதைச் சக்கரம் போல் சுருட்டி உருள விட்டார். அந்தச் சக்கரம் உருண்டு வந்து இந்தக் காட்டில் நின்றதால், இது நைமிசாரண்யம் என்று அழைக்கப்படுகிறது.

சக்கரம் வந்து நின்ற இடத்தில் வட்டமாக ஒரு சிறு குளம் இருக்கிறது. இது சக்ர தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

இந்தத் தலத்தில் ஒரு நிமிடம் தவம் செய்தாலும் முக்தி அடையலாம் என்பதைக் குறிக்கும் விதமாகவும் நைமிசாரண்யம் (நிமிஷம் + ஆரண்யம்) என்ற பெயர் அமைந்துள்ளது.

இங்கு தானவர்கள் என்ற அரக்கர்கள் பகவானால் ஒரு நிமிஷத்தில் அழிக்கப்பட்டதாக வராஹ புராணம் கூறுகிறது.

நைமிசாரண்யம் புராணங்களில் போற்றப்பட்டிருக்கும் ஒரு தலம்.
பல முனிவர்கள் தவம் செய்த புண்ய பூமி இது.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் நைமிசாரண்யம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்ய வந்தபோது, லவ குசர்கள் தங்கள் தந்தை ராமரைச் சந்தித்தது இங்குதான்.

அர்ஜுனனின்  மகன் அபிமன்யுவின் வாரிசாக, உத்தரையின் வயிற்றில் உதித்த பரீக்ஷித் மன்னன் ஒரு முனிவரின் சாபம் காரணமாக தக்ஷகன் என்ற பாம்பால் கடித்துக் கொல்லப்பட்டான். அப்போது சிறுவனாக இருந்த பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன் வளர்ந்து அரசனான பின் தன் தந்தைக்கு நேர்ந்த கொடுமைக்குப் பழி தீர்க்கும் விதத்தில், பாம்புகளை மொத்தமாக அழிக்க எண்ணி சர்ப்ப யாகம் என்ற யாகம் செய்தான். அந்த யாகத்துக்கு வந்திருந்த வியாசர், தன் சீடர் வைசம்பாயனரிடம் சொல்லி,  அங்கிருந்த முனிவர்களுக்கு மகாபாரதக் கதையைச் சொல்ல வைத்தார்.

அங்கு அதைக் கேட்ட உக்ரஸ்ரவஸ் என்ற முனிவர் நைமிசாரண்யத்தில் தவம் செய்து வந்த சௌனகர் முதலான முனிவர்களுக்கு மகாபாரதக் கதையைச் சொன்னார்.

ஒருமுறை பலராமர் சூத பௌராணிகரைப் பார்க்க வந்தபோது, அவர் தன்னை கவனிக்கவில்லை என்று கோபமடைந்து பலராமர் அவரை அடித்து விட்டார். இந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள பலராமர் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்றார். ஆனால் நைமிசாரண்யத்தில்தான் அவர் பாவம் நீங்கியது. அவர் இங்கே முனிவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த வில்வலன் என்ற ஒரு அரக்கனைக் கொன்றதால் முனிவர்கள் மகிழ்ந்தனர்.

கயாசுரன் என்ற ஒரு அசுரன் தவம் செய்தான். அவன் தவத்துக்குப் பலனாக விஷ்ணு அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்க முன் வந்தார். ஆனால் கயாசுரன் தான் விஷ்ணுவை விட பலம் வாய்ந்தவன் என்று கூறியதால் விஷ்ணு அவன் மீது சக்கரத்தை விட்டார், கயாசுரன் உடல் மூன்று பகுதிகளாகப் பிளந்து மூன்று இடங்களில் விழுந்தது.

தலைப் பகுதி விழுந்த இடம் சிரோ கயா - பத்ரி
நடுப்பகுதி விழுந்த இடம் நாபி கயா - நைமிசாரண்யம்
கீழ்ப்பகுதி விழுந்த இடம் சரண கயா - கயை.

இந்த மூன்று இடங்களும் பித்ருக்களுக்குக் கடன்கள் செய்த ஏற்ற இடம் என்று கருதப்படுகின்றன.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நைமிசாரண்யத்தில் பல கோவில்கள் மற்றும் வேறு பல புனிதமான இடங்கள் உள்ளன.

இங்குள்ள தேவராஜப் பெருமாள் கோவில் 99ஆவது திவ்யதேசம். வடநாட்டு எட்டு திவ்யதேசங்களில் நான்காவது. இந்தப் பெருமாள் நைமிஷ நாத பகவான் என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் - தேவராஜன், ஸ்ரீஹரி. நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கித் திருமுகமண்டலம்
தாயார் - ஸ்ரீஹரி லட்சுமி, புண்டரீகவல்லி
விமானம் - ஸ்ரீஹரி விமானம்
புஷ்கரணி  - சக்ர தீர்த்தம், கோமதி நதி, நேமிதீர்த்தம், திவ்ய விஸ்ராந்த தீர்த்தம்
ஸ்தல விருக்ஷம் - தபோவனம்
பிரத்யட்சம் (பெருமாள் காட்சி கொடுத்தது): இந்திரன், சுதாமா, தீவரிஷிகள், சூத பௌராணிகர், வியாசர்.


இந்த திவ்ய தேசத்தைத்  திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.















இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
நைமிசாரணியம்
997 வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்
      மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி
      பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி
      இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (1)
 
998 சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
      திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி
      போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா
      வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (2)
 
999 சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து
      சுரி குழல் மடந்தையர்திறத்துக்
காதலே மிகுத்து கண்டவா திரிந்த
      தொண்டனேன் நமன்-தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை
      வெண் திரை அலமரக் கடைந்த
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (3)
 
1000 வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
      பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
      எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
      தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (4)
 
1001 இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று
      இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ
      நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்
      படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (5)
 
1002 கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து
      திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்
      உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்
      பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்
      -நைமிசாரணியத்துள் எந்தாய்             (6)
 
1003 நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
      நீதி அல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே
      துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா
      வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (7)
 
1004 ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்-
      எங்ஙனே வாழும் ஆறு?-ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
      குறுங்குடி நெடுங் கடல் வண்ணா
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன்
      பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்
      -நைமிசாரணியத்துள் எந்தாய்             (8)
 
1005 ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
      உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்-
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்-தன்
      சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே
      திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (9)
 
1006 ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி
      எழுமினோ தொழுதும் என்று இமையோர்-
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து
      எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்
      மாலை-தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்
      உம்பரும் ஆகுவர் தாமே             (10)

ஓம் நமோ நாராயணாய