Sunday, December 15, 2013

6. முதலாழ்வார்கள்


இந்தப் பதிவுக்கு 'வழி காட்டும் வைணவம்' என்று பெயர் வைத்ததற்குக் காரணம் வைணவம் ஒரு மதம் என்ற அடிப்படையில் இறைவனை அடைய வழி காட்டுகிறது என்பது மட்டும் அல்ல. வைணவத்தை போதித்த, பின்பற்றிய ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் போன்றோர் தங்கள் சிந்தனைகள், எழுத்துக்கள் மற்றும் செயல்கள் மூலம் நடைமுறை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கக்கூடிய சில சிறப்பான வழிகளைக் காட்டியிருக்கிறார்கள் என்பதும்தான். இதற்கு ஒரு உதாரணம்தான் இப்போது நாம் பார்க்கப் போகும் ஒரு நிகழ்வு.

திருக்கோவலூர் என்று ஒரு தலம் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது. இது நூற்றியெட்டு திருப்பதிகளில் ஒன்று. இவ்வூரில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது.

மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையில் தெருவில் நடந்து வந்த ஒருவர் மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஒரு வீட்டின் ரேழியில் ஒதுங்குகிறார். (பழைய வீடுகளின் முகப்பில் திண்ணை என்ற மேடை இருக்கும். திண்ணைக்குப் பின்னே ரேழி என்று ஒரு இருட்டுப் பகுதி இருக்கும். ரேழியைத் தாண்டியபின் தான் வீட்டின் கூடம் வரும். இப்போதும் கிராமங்களில் இந்த அமைப்பு கொண்ட வீடுகள் நிறையவே இருக்கின்றன. பல வீடுகளில் வாயிற்கதவு திறந்தே இருக்கும். வீட்டின் புழங்கும் பகுதி கூடத்தில் இருந்துதான் துவங்குவதால் ரேழி வரை எவரும் வரலாம்.  வீட்டில் இருப்பவர்களின் அந்தரங்கம் (privacy) ரேழியைத் தாண்டித்தான் துவங்கும். எனவே மழை பெய்தால் தெருவில் நடப்பவர்கள் ஏதாவது ஒரு வீட்டின் ரேழியில் வந்து நின்று விட்டு மழை நின்றவுடன் வெளியேறும்  பழக்கம் உண்டு.)

ரேழியில் நுழைந்தவர் அங்கிருந்த குறுகிய திண்ணையில் படுத்துக் கொள்கிறார்.

சற்று நேரம் கழித்து மழைக்கு ஒதுங்க மற்றொருவர் அங்கே வருகிறார். ஏற்கெனவே ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்து, 'இடம் இருக்கிறதா?' என்று வினவுகிறார்.

படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, 'ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்' என்று சொல்லி, புதிதாக வந்தவருக்குத் தம் பக்கத்தில் உட்கார இடம் அளிக்கிறார். சற்று நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் மழைக்கு ஒதுங்க அங்கே வருகிறார். ஏற்கெனவே இருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துத் தமக்கு அங்கே இடம் இருக்குமா என்று தயங்கி நிற்கிறார். அப்போது உட்கார்ந்திருந்த இருவரும் எழுந்து நிற்கின்றனர். முதலில் வந்தவர், 'ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம்' என்கிறார். மூவரும் நின்று கொள்கின்றனர்.

மூவருக்கும் நெருங்கி நிற்கத்தான் அங்கே இடம் இருக்கிறது. அப்போது திடீரென்று அந்த மூவருக்கும் தங்களை யாரோ நெருக்குவதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. நான்காவதாக ஒருவர் அங்கே வந்திருப்பதை மூவரும் உணர்கிறார்கள். ஆனால் அவர் உருவம் அவர்களுக்குப் புலப்படவில்லை. வானம் கருத்திருப்பதால் அந்த இடம் இருட்டாக இருக்கிறது.

அப்போது ஒரு மின்னல் வீசுகிறது. மின்னல் வீசிய அந்த ஒரு கணத்தில் நான்காவதாக வந்தவரின் முகத்தை மூவரும் பார்க்கிறார்கள். நான்காவதாக அங்கே வந்திருப்பவர் பகவான் விஷ்ணுதான்!

மீண்டும் பகவானின் திருமுகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆனால் மின்னல் அடித்தால்தான் பார்க்க முடியும். மின்னல் எப்போது அடிக்குமோ?

ஒரு விளக்கு இருந்தால் திருமாலின் முகத்தை மீண்டும் காணலாமே என்று நினைக்கிறார் முதலில் வந்தவர். விளக்கு ஏற்ற அகல், எண்ணெய், திரி, நெருப்பு  எல்லாம் வேண்டுமே! அவற்றுக்கு எங்கே போவது? எனவே தனது ஞானத்தால், தானே ஒரு விளக்கை உருவாக்குகிறார் அவர்.

அவர்தான் முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கை ஆழ்வார். திருமாலின் மீது ஒரு பாசுரம் பாடி ஞான விளக்கை ஏற்றுகிறார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று.

இதன் பொருள்:
இவ்வுலகத்தையே அகலாக்கி, அலை வீசும் கடலையே நெய்யாக்கி, சூரியனையே திரிச் சுடராக்கி, கையில் சுடர் விடும்  சக்கரத்தை ஏந்தியிருக்கும் (அந்தச் சுடரின் முன் சூரிய ஒளி எம்மாத்திரம்!)  உனது திருவடியில் என் பாசுரத்தை சொல்மாலையாகச் சூடுகிறேன். துன்பக்கடலான இவ்வுலகிலிருந்து நான் மீள வேண்டும் (உன் திருவடி சேர வேண்டும்) என்று வேண்டி

விளக்கு தொடர்ந்து ஒளிவிட்டுக் கொண்டிருந்தால்தானே திருமாலின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்? எனவே முதல் பாடலைத் தொடர்ந்து அவர் மேலும் 99 பாசுரங்கள் பாடுகிறார். இவர் பாடிய நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி என்ற தொகுப்பாக அழைக்கப் படுகின்றன.

இவரைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்தவர்,

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா - நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

என்று தொடங்குகிறார். 

இதன் பொருள்:
அன்பையே அகலாக்கி, ஆர்வத்தையே நெய்யாக்கி, உன்னை நினைத்து இன்புற்று உருகும் என் மனத்தையே திரியாக்கி, ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறேன். என்னுடைய தமிழ் அறிவால் நாராயணனின் புகழ் பாடுகிறேன்.

இவரும் நூறு பாசுரங்கள் பாடுகிறார். இவர்தான் முதலாழ்வார்களில் இரண்டாமவரான பூதத்தழ்வார். இவர் பாடிய பாடல்கள் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

மூன்றாவதாக வந்தவர் முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார். இவர் பாடிய நூறு பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி என்று வழங்கப்படுகின்றன. இவர் பாடிய முதல் பாசுரம்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று

இதன் பொருளை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். பெருமாளின் திருக்கோலத்தை வர்ணித்துப் பாடப்பட்ட பாடல் இது.  முதலில் ஆழ்வாரின் கண்ணுக்குத் தெரிவது திருமாலின் திருமார்பில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி. (திருமகளை முன்னிட்டே திருமாலை அணுக வேண்டும் என்று முன்பு நாம் பார்த்த வைணவக் கோட்பாட்டின் வெளிப்பாடுதான் இது.) திருமகளின் மேனி பொன் போன்று விளங்குகிறது. பிறகு திருமாலின் பொலிவுக்கு அழகு சேர்க்கும் அவரது கரிய நிறத்தைக் காண்கிறார். அதற்குப்பின் பெருமாளின் தோள்களை தரிசிக்கிறார். அங்கே அவர் பார்த்தது சங்கும் சக்கரமும். 'என் ஆழி வண்ணன்' என்று கடல் நிறம் கொண்டவர் எம்பெருமான் என்று சொல்லி முடிக்கிறார்.

முதல் ஆழ்வார்களைப் பற்றி விரிவாக பின்னொரு பகுதியில் எழுத எண்ணியுள்ளேன்.

இப்போது இந்தச் சம்பவத்தைச் சற்று நெருக்கமான கோணத்தில் பார்ப்போம். முதலாழ்வார் தனது வசதியைக் குறைத்துக்கொண்டு, படுத்துக்கொள்ள முடியாவிட்டால் என்ன, அதுதான் உட்கார இடம் இருக்கிறதே என்று எண்னி இரண்டாவதாக வந்தவருக்கு இடமளித்ததைப் பார்த்தோம். அதற்கும் மேலாக மூன்றாவதாக ஒருவர் வந்தபோது உட்கார்ந்திருந்த இருவரும் தங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று எண்ணி எழுந்து நின்ற பரந்த மனப்பான்மையை என்னென்று சொல்வது!

இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்டவர்களிடையே இருக்க விரும்பி பகவானே நேரில் வந்து அவர்களது இட நெருக்கடியைத் தானும் பகிர்ந்து கொண்டதை பார்க்கும்போது, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் தேவையையும், உயர்வையும், இன்றியமையாமையையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். நம்மிடம் இருப்பது எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. மூன்று பேர்தான் நிற்க முடியும் என்று கருதப்பட்ட இடத்தில் நான்கு பேர் நின்றார்களே எப்படி? தேவை ஏற்பட்டால் எதுவும் சாத்தியம்!

'மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்'
என்ற கண்ணதாசனின் வரிகள் கூட இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

நம்மிடம் உள்ள எதையும், அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அப்படிப் பகிர்ந்து கொள்பவர்களைத் தேடி இறைவன் வருவான். இந்தக் கருத்தை இந்தச் சம்பவத்தின் உட்பொருளாக எடுத்துக்கொண்டு, இதை வைணவத்தின் கோட்பாடுகளில் ஒன்று என்று கொள்ளலாமே!

Tuesday, December 3, 2013

5. ஆச்சாரியர்கள்


வைணவத்தில் ஆச்சாரியருக்குச் சிறப்பான இடம் உண்டு. ஆச்சாரியர் (ஆசான் அல்லது குரு) மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பது வைணவக் கோட்பாடு. முதலில் ஆச்சாரியர் அப்புறம்தான் ஆண்டவன் என்று கூடச் சொல்லலாம்.

ஆச்சாரியரின் மகத்துவத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியவர் மதுரகவி ஆழ்வார். இதைப் பற்றி முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். நம்மாழ்வாரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டவர் இவர். இவர் பாடிய கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பதினோரு பாசுரங்களும் நம்மாழ்வாரைப் போற்றித்தான்.

இந்தப் பதிகத்தில் (பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு பதிகம் என்று வழங்கப் படுகிறது) வரும் ஒரு பாசுரம் இது.

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்குஆள்
புக்ககாதல் அடிமைப் பயனன்றே.

இதன் பொருள்:

அறிஞர்களால் மற்றுமே உணரக் கூடிய வேதங்களை, அவற்றின் பொருள் அனைவருக்கும் விளங்கும்படி தமிழில் பாசுரங்களாகப் பாடி, என் மனதில் பதிய வைத்த சடகோபனுக்கு (நம்மாழ்வாருக்கு)ப் பணி செய்வதே என் வாழ்க்கைப் பயன்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்குச் சிறப்பான உட்பொருள் உண்டு. 'பிறவிப் பயன்' என்று சொல்லாமல் 'அடிமைப் பயன்' என்று ஏன் சொல்கிறார்? விசிஷ்டாத்வைதத் தத்துவத்தின்படி பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவு எஜமானருக்கும் வேலைக்காரருக்கும் உள்ள உறவு. ஜீவாத்மா பரமாத்மாவுக்கு உரியது. பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வதே ஜீவாத்மாவின் கடமை. அதனால் அடிமைப் பயன் என்று குறிப்பிடுகிறார் ஆழ்வார். (இது எனது கருத்து. வேதங்களிலும் சாஸ்திரங்களிலும், ஆழ்வார்களின் பாசுரங்களிலும் தேர்ந்த ஞானம் பெற்ற அறிஞர்கள் இதற்கு வேறு சிறப்பான பொருளைக் கூறக்கூடும்.)

ஆச்சாரியர் என்பவர் யார்? வைணவர்கள் அனைவருக்கும் ஆச்சாரியர் விசிஷ்டாத்வைதத் தத்துவைத்தைப் போதித்த ராமானுஜர். அவருடைய ஆச்சாரியர்கள், அவருக்குப் பின் அவர் வழியில் செயல் பட்ட/பட்டு வரும் ஆச்சாரியர்கள் என்று வைணவ ஆச்சாரிய பரம்பரை, நிறுவனங்களின் நிர்வாக அமைப்பைப்போல் பல படிகள் கொண்ட அமைப்பு (hierarchy).

வைணவ ஆச்சாரிய பரம்பரையை விவரிக்கும் ஒரு பாசுரம் இது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.

முதலில் நமக்கு உயிர்கொடுத்த பெற்றோரைச் சரணடைய வேண்டும்
பிறகு நமது பெற்றோர்களின் ஆச்சாரியர்களை (குருக்களை) நம் குருவாக ஏற்று வணங்க வேண்டும். பிறகு இறைவனின் அருளால் நமக்குக் கிடைத்த ராமானுஜரையும், அவருடைய குருக்களான் பெரிய நம்பி, மணக்கால் நம்பி, உய்யக்கொண்டார், ஆளவந்தார் (நாதமுனி) ஆகியோரையும் வணங்க வேண்டும். பிறகு சடகோபன் என்கிற நம்மாழ்வார், சேனைநாதனான விஷ்வக்சேனர், எல்லா நலங்களையும்  அமுதமாக வழங்கும் திருமகள் இவர்களை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை வணங்க வேண்டும்.

இந்த ஆச்சாரியர்களின் பட்டியலில் இரண்டு முக்கியமான பெயர்கள் விட்டுப் போயிருப்பதை சிலர் கவனித்திருக்கக்கூடும். வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் பெயர்கள் இதில் இல்லை. காரணம். இந்தப் பாசுரத்தை எழுதியவர் வேதாந்த தேசிகர்! மணவாள மாமுனிகள் இவருக்குப் பின்னால் தோன்றியவர்.