Sunday, October 21, 2018

66. திவ்யதேச தரிசன அனுபவம் - 45. 21.திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)

தரிசனம் செய்த நாள்: 20.10.18 சனிக்கிழமை  
சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40  
21.திருநந்திபுரவிண்ணகரம்
  

21.திருநந்திபுரவிண்ணகரம்
செயற்கரிய செய்வோமைச் செய்யாம னெஞ்சே!
மயக்குவா ரைவர் வலியால் - நயக்கலவி
சிந்திபுர விண்ணகர மென்பர்திருச் செங்கண்மால்
நந்திபுர விண்ணகர நாடு. (21)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 


கும்பகோணத்திலிருந்து சுமார்  16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாதன் கோவில் என்று அழைக்கப்படும்  நந்திபுர விண்ணகரம் என்னும் இந்த திவ்யதேசம். ஒப்பிலியப்பன் கோவிலுக்கு மேற்கேயும், மன்னார்குடிக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.  திப்பிராஜபுரம், பட்டீஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அருகே அமைந்துள்ளது  நாதன் கோவில்.

விண்ணகரம் என்ற பெயர் வைகுண்டத்தைக் குறிக்கும். விண்ணகரம் என்று பெயர் கொண்ட மற்ற திவ்யதேசங்கள் திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்), பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்), அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்), காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) ஆகியவை.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சென்று திப்பிராஜபுரம் அருகில் மேற்கே செல்லும் சாலையில் சென்று கோவிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து   இன்னொரு வழியும் இருக்கிறது.

இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அருகே பழையாறை என்ற ஊர்
அமைந்துள்ளது. இது சோழர்களின் தலைநகராக வழங்கிய ஊராக இருக்கலாம். ஆனால் இப்போது ஒரு குக்கிராமமாகத்தான் காட்சி தருகிறது 

சிவபெருமானின் வாகனமான நந்தி ஒருமுறை விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றபோது, அங்கே துவாரபாலகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், துவாரபாலகர்களின் சாபத்துக்கு ஆளானார். அதனால் நந்திக்கு உடல் முழுவதும் வெப்பம் ஏற்பட்டது. தன்  சாபத்தைப் போக்கிக்கொள்ள அவர் சிவபெருமானின் யோசனைப்படி செண்பகவனம் என்ற இடத்தில் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தார். விஷ்ணு அவருக்குக் காட்சியளித்து அவரது சாபத்தைப் போக்கினார். அதனால் இந்த திவ்யதேசம் நந்திபுர விண்ணகரம் என்று பெயர் பெற்றது. இந்த ஊர் நந்திபுரம் என்று பெயர் பெற்றது.

நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதால் இதற்கு நந்திபுர விண்ணகரம் என்று பெயர் வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.

மகாலக்ஷ்மி விஷ்ணுவின் மார்பில் தான் இடம் பெற வேண்டும் என்று  வேண்டி செண்பக வானம் என்ற இந்த இடத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணு அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் ஏற்றுக்கொண்டார். 

திருமகளின் நாதனாகப் பெருமாள்  இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார் என்பதையும்  நாதன் கோவில்  என்ற பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.

மூலவர்: ஸ்ரீனிவாசன். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 

உற்சவர்: ஜகந்நாதன். 

தாயார்: செண்பகவல்லி. பிரகாரத்தின் இறுதியில் பெருமாளை  நோக்கியபடி கிழக்கு நோக்கி  தனிக்கோவில் நாச்சியாராக  அமர்ந்திருக்கிறார்.

விமானம்: மந்தார விமானம் 

புஷ்கரணி: நந்தி புஷ்கரணி.

கர்ப்பக்கிருகத்தில் பிரம்மாவும், நந்தியும்.  பெருமாளை வணங்கியபடி  இருக்கிறார்கள் . 
மூலவர் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் பெற்றிருந்தாலும், உற்சவர் பெயரிலேயே இந்தக் கோவில் ஜகந்நாதர் கோவில் என்றும், நாதன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே, சந்நிதிக்கு வலது புறத்தில் ஆழ்வார்கள் விக்கிரகங்கள் உள்ளன. ஆழ்வார்களுக்கு அடுத்தபடி ராமானுஜர் இரு புறமும் இரு சீடர்களுடன் சேவை சாதிக்கிறார்.

சந்நிதிக்கு நேரே மண்டபத்தின் வாயிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் விக்கிரகம்
சற்று உயரத்தில் அமைந்துள்ளது. 

ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்குக் கீழே ஒரு மன்னர் தன்  இரண்டு ராணிகளுடன்  நிற்கும் தோற்றம். இது  கோவிலைக் கட்டிய அல்லது கோவிலுக்குத் திருப்பணி செய்த  சொக்கப்ப நாயக்கர் என்ற மன்னரின் உருவச்சிலை  என்று அர்ச்சகர் கூறினார். இவருக்கு அருகில் குந்தவையின் உ ருவச்சிலையும் உள்ளது.

கோவிலின் முன் அடியேனும், என் மனைவியும் 



















இந்தக் கோவில் திருமங்கை ஆழ்வாரால் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஐந்து பாடல்களில் பெருமாளை கிருஷ்ணனாகவும், அடுத்த ஐந்து பாடல்களில் ராமனாகவும் நினைத்துப் பாடியிருக்கிறார் ஆழ்வார்.









பாசுரங்கள்  இதோ:

நாலாயிர திவ்ய பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநந்திபுரவிண்ணகரம்
1. தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு 
      விசும்பும் அவை ஆய் 
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை 
      ஆய பெருமான் 
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட 
      மார்வர் தகைசேர் 
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1437)
 
2. உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி
      யாமை முன நாள் 
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன்-அவன் 
      மேவும் நகர்-தான்- 
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் 
      கிண்டி அதன்மேல் 
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1438)
 
3. உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி
      யாமை முன நாள் 
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட 
      மார்வர் தகை சேர் 
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி 
      கங்குல் வயல் சூழ் 
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1439)
 
4. பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என 
      வந்த அசுரர் 
இறைகள்-அவை-நெறு-நெறு என வெறிய-அவர் வயிறு அழல 
      நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல 
      அடிகொள் நெடு மா 
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1440)
 
5. மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என 
      வந்த அசுரர் 
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி 
      ஆம் அளவு எய்தான் 
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை 
      அம்கை உடையான் 
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1441)
 
6. தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை 
      ஆக முன நாள் 
வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது 
      மேவும் நகர்-தான்- 
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் 
      ஆர் புறவு சேர் 
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1442)
 
7. தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் 
      நந்தன் மதலை 
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ 
      நின்ற நகர்-தான்- 
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள் 
      ஆடு பொழில் சூழ் 
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1443)
 
8. எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
      யாளர் திரு ஆர் 
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு 
      கூட எழில் ஆர் 
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள் 
      தாம் மலர்கள் தூய் 
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1444)
 
9. வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக 
      மிக்க பெருநீர் 
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் 
      அறிதியேல் 
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி 
      எங்கும் உளதால் 
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1445)
 
10. நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் 
      நண்ணி உறையும் 
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை
      யானை ஒளி சேர் 
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை 
      ஐந்தும் ஐந்தும் 
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் 
      முழுது அகலுமே             (1446)


ஓம் நமோ நாராயணாய 






























No comments:

Post a Comment