Tuesday, February 6, 2018

54. திவ்யதேச தரிசன அனுபவம் - 31 திருக்கடித்தானம் (70)

தரிசனம் செய்த நாள்: 23.01.18  செவ்வாய்க்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
12. திருக்கடித்தானம் (70)


காண விரும்பமெண்கண் கையுந் தொழவிரும்பும்
பூண விரும்புமென்றன் புன்றலைதான் - வாணன்
திருக்கடித்தா னத்தான் றிகிரியான் றண்டான்
திருக்கடித்தா னத்தானைச் சென்று. (70)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி  

செங்கணாஞ்சேரிக்கு அருகில் அமைந்துள்ள திவ்யதேசம் இது. பஞ்சபாண்டவர்களில் இளையவனான சகதேவனால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் இது. அதனால் இது சகதேவன் கோவில் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 

கடி என்ற பெயர் கொண்ட மூன்று திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு சோளிங்கர் என்று அழைக்கப்படும் கடிகாசலம் அல்லது   திருக்கடிகை மற்றது கடிநகர் என்னும் தேவப்பிரயாகை.

கடி/கடிகை  என்றால் ஒரு நாழிகை. (கடிகாரம் என்ற பெயர் கடிகை +ஆரம் என்ற சொற்களிலிருந்து வந்ததுதான்) இந்த மூன்று திவ்யதேசங்களிலுமே ஒரு நாழிகை நேரம் நாம் இருந்தால், நம் பாவங்கள் தொலைந்து, நமக்கு பகவானின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஏகாதசி விரதத்தை முறையாக அனுசரித்து ஏற்றம் பெற்ற ருக்மாங்கதனின் கதை பத்மபுராணத்தில் கூறப்படுகிறது. அந்த ருக்மாங்கதன் இந்தக் கோவிலுக்கு அருகே நந்தவனம் அமைத்துப் பெருமாளுக்கு மலர் சேவை (புஷ்ப கைங்கரியம்) செய்து வந்தான்.

ருக்மாங்கதனின் நந்தவனத்தில் பூத்த மலர்களின் அற்புதமான நறுமணம்
பற்றி நாரதர் மூலம் அறிந்த இந்திரன் சில தேவர்களை அனுப்பி இந்த நந்தவனத்திலிருந்த மலர்களைக் கொண்டு வரச் செய்தான். இரவில் மலர்கள் பறித்துச் செல்லப்பட்டதால், காலையில் ருக்மாங்கதனுக்கு மலர்கள் இல்லாமல் போய் விட்டது. மலர்கள் களவாடப்படுவதைத் தடுக்க ருக்மாங்கதன் சில காவலர்களை நியமித்தான். அடுத்த நாள் மலர் பறிக்க வந்த தேவர்கள் ருக்மாங்கதனின் காவலர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

பிடிபட்டவர்கள் தேவர்கள் என்று அறிந்ததும் ருக்மாங்கதன் அவர்களை விடுவித்து விட்டான். ஆயினும் பூவுலகில் சிறிது காலம் தங்கி விட்டதால் தங்களால் தேவலோகத்துக்குத் திரும்பப் போக முடியாது என்று அவர்கள் கூறினர். ஏகாதசி விரதம் இருந்த ஒரு பெண் தன புண்ணியத்தைத் தங்களுக்கு அளித்தால்தான் தங்களால் தேவலோகத்துக்குத் திரும்ப முடியும் என்று அவர்கள் கூறியதால், ஏகாதசி விரதம் இருந்த ஒரு மூதாட்டியைத் தேடித் பிடித்து அவளைத் தான் ஏகாதசி விரதம் இருந்த பலனை அந்த தேவர்களுக்கு அளிக்கும்படி ருக்மாங்கதன் கேட்டுக்கொள்ள, அவளும் அவ்வாறே தன் புண்ணியத்தை அளித்தாள். ருக்மாங்கதன், மூதாட்டி இருவருக்கும் பெருமாள் அற்புத நாராயணனாகக் காட்சி அளித்தார் என்பது இந்தத் தலத்தின் வரலாறு. கடி என்றால்நறுமணம் என்றும் பொருள் உண்டு. மணமுள்ள மலர்கள் பூத்த நந்தவனம் இங்கு இருந்ததாலும், கடித்தானம் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது.

பாண்டவர்களின் தந்தை பாண்டு இங்குதான் இறந்தார் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 9ஆம் தேதி தீபக்கழா என்ற உற்சவத்தில் வாழை இலைகளை அடுக்கி, அதைப்  பாண்டுவின் உடலாகக் கருதி எரிக்கும் சடங்கு இங்கு நடைபெறுகிறது.

இங்கு அற்புத நாராயணனின் சந்நிதிக்குப் பின்புறம் நரசிம்மர் சந்நிதி உள்ளது. பெருமாளுக்கு இடப்புறம் தட்சிணாமூர்த்தியின் சந்நிதி உள்ளது. இவரை  பிரகாரத்தில் ஒரு துவாரம் வழியாக தரிசிக்கலாம்.

மூலவர் - அற்புத நாராயணன், அம்ருத நாராயணன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்  

தாயார் - கற்பகவல்லி நாச்சியார் (தனிக்கோவில் சந்நிதி இல்லை. பெருமாளின் திருமார்பில் உறைந்திருக்கும் தாயாருக்கே இந்தப் பெயர்)

விமானம் - புண்யகோடி விமானம் 

தீர்த்தம் - பூமி தீர்த்தம் 

விருட்சம் - மகிழ மரம் 

இந்த திவ்யதேசம் பற்றி எங்கள் யாத்திரை வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் வழங்கிய உரையின் காணொளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 



நம்மாழ்வார் திருவாயமொழியில் இந்த திவ்ய தேசம் பற்றி 11 பாசுரங்கள் பாடியுள்ளார். பாசுரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
எட்டாம் பத்து
ஆறாந் திருமொழி
1. எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. (3726)

2. திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. (3727)

3. ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுரைகின்ற மாயப் பிரானே. (3728)

4. மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே. (3729)

5. கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்
கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே. (3730)

6. கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே. (3731)

7. கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே. (3732)

8. தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே. (3733)

9. தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே. (3734)

10. அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. (3735)

11. சோலை திருக்கடித் தானத் துறைதிரு மாலை,
மதிள்குரு கூர்ச்சடகோபன்சொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே. (3736)

ஓம் நமோ நாராயணாய!




Monday, February 5, 2018

51. திவ்யதேச தரிசன அனுபவம் - 30 திருக்காட்கரை (61)

தரிசனம் செய்த நாள்: 23.01.18  செவ்வாய்க்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
3. திருக்காட்கரை (61)

மார்க்கமுந் தாந்தாம் வழிபடுந் தெய்வமும்
ஏற்க வுரைப்பார்சொ லெண்ணாதே - தோற்குரம்பை
நாட்கரையா முன்னமே நன்னெஞ்சே! நாரணனாம்
காட்கரையாற் காளாகாய்! காண். (61)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி  

எர்ணாகுளத்துக்கு அருகில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம். திருக்காட்கரை என்றும் திருக்காக்கரை என்றும் அறியப்படுகிறது.

கோவில் உள்ளமைப்பைக் காட்டும்  சுருக்கமான வீடியோ.



விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் கபிலர் விஷ்ணுவை வாமனராகக் காண விரும்பி இந்த ஊரில் தவம் செய்தார். அவருக்கு வாமனராகக் காட்சி கொடுத்தார் பெருமாள். எனவே இங்கே எழுந்தருளியிருப்பவர் வாமனமூர்த்தி.

இவ்வூரில் வாழ்ந்து வந்த ஒரு பக்தர் தன் வாழைத்தோப்பு காய்க்கவில்லை என்று பெருமாளிடம் வேண்டிக்கொண்டார். அதன்பிறகு அவர் வாழைத்தோப்பு நன்கு காய்த்தது. பெருமாளின் கண்பார்வை பட்டதால் வாழை காய்த்ததால், அந்த வாழைப்பழம் நேத்திரப்பழம் என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி நேந்திரம்பழம் என்றாகியது. (நேத்திரம் என்றால் கண் என்று பொருள்.)

அந்த பக்தர் தங்கத்தில் ஒரு வாழைப்பழக் குலை செய்து பெருமாளுக்குச் சமர்ப்பித்தார். அது காணாமல் போனதாகக் கருதிக் கோயிலில் இருந்த ஒரு யோகியின் மீது சந்தேகப்பட்டு அரசன் அவரைத் துன்புறுத்தினான். ஆனால் அந்தத் தங்க வாழைக்குலை கர்ப்பக்கிருகத்திலேயே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தங்க வாழைப்பழக் குலை இப்போதும் கோவிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தான் துன்புறுத்தப்பட்டதால் கோபமடைந்த அந்த யோகி ஒரு பிரம்மரக்ஷஸாக மாறி அந்தக் கோவிலிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பிரகாரத்தில் பிரம்மரக்ஷஸ் சந்நிதியும், அந்த பிரம்மரக்ஷஸைக் கட்டுப்படுத்த ஒரு யக்ஷி சந்நிதியும் உள்ளன.

மஹாபலிச் சக்ரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தின்போது (ஓணம் பண்டிகை) இங்கே வந்து வாமனரை தரிசித்து விட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது.

பெருமாள் கோவிலை ஒட்டி ஒரு சிவன் கோவிலும் உள்ளது.

மூலவர் - வாமன மூர்த்தி. காட்கரை அப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார் - பெருஞ்செல்வ நாயகி மற்றும் வாத்சல்ய வல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.  தாயாருக்குத் தனிக்கோவில் இல்லை. பெருமாளின் திருமார்பில் அமர்ந்திருக்கும் தாயாருக்கே இந்தப் பெயர்.

விமானம் - புஷ்கல விமானம்

தீர்த்தம் - கபில தீர்த்தம்

இந்த திவ்ய தேசம் பற்றித் தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கவுரையை இந்த வீடியோவில் கேட்கலாம். ஒலியின் அளவு சற்றுக் குறைவாக இருப்பதால்,  இயர்ஃபோன் பயன்படுத்திக் கேட்பது சிறப்பாக இருக்கும்.



நம்மாழ்வார் திருவாய்மொழியில் 11 பாசுரங்களால் திருக்காட்கரை திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

நம்மாழ்வார் 
திருவாய் மொழி 
ஒன்பதாம்  பத்து 
ஆறாம்  திருமொழி
(3836)
1. உருகுமால்நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்
தெருவெல்லாங்காலிகழ் திருக்காட்கரை
மருவியமாயன்றன் மாயம்நினைதொறே. (3836)

2. நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர்
கனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா
நினைகிலேன் நானுனக்காட்செய்யும்நீர்மையே. (3837)

3. நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து என்னை
ஈர்மைசெய்து என்னாயிராயென்னுயிருண்டான்
சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன்
கார்முகில்வண்ணன்றன் கள்வமறிகிலேன். (3838)

4.அறிகிலேன்தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால்தானும் அவற்றுள் நிற்கும்பிரான்
வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன்
சிறியவென்னாயிருண்ட திருவருனே. (3839)

5. திருவருள்செய்பவன் போல என்னுள்புகுந்து
உருவமுமாருயிரும் உடனேயுண்டான்
திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன்
கருவளர்மேனி என்கண்ணன்கள்வங்களே (3840)

6. என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்
அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது
புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்
என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே. (3841)

7. காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும்
வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும்
ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால்
கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே. (3842)

8. கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்
நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்
காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு
ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே. (3843)

9. ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது
பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயதோர்
காரெழில்மேகத் கேன்காட்கரைகோயில்கொள்
சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே. (3844)

10. வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று
ஆர்வற்றவென்னையொழிய என்னில்முன்னம்
பாரித்து தானென்னை முற்றப்பருகினான்
காரொக்கும் காட்கரையப்பன்கடியனே. (3845)

11. கடியனாய்க் கஞ்சனைக் சொன்றபிரான்றன்னை
கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல்
வடிவமையாயிரத்து இப்பத்தினால்சன்மம்
முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே. (3846)
ஓம் நமோ நாராயணாய!






Sunday, February 4, 2018

57. திவ்யதேச தரிசன அனுபவம் - 36 திருப்புலியூர் (63)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
5. திருப்புலியூர் (63)

[ தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]
முதல்வண்ண மாமே முலைவண்ண முன்னே
விதிவண்ண நீங்கி விடுமே - சதுரத்
திருப்புலியூர் நின்றான் றிருத்தண் டுழாயின்
மருப்புலியூர் தென்றல் வரின் (63)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

பஞ்சபாண்டவர்களில், பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில் இது. துரோணரைக் கொல்வதற்காக, அஸ்வத்தாமா என்ற யானையை முதலில் பீமன் கொல்ல, துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமா இறந்து விட்டதாக துரோணர் நினைக்கும் வகையில், யுதிஷ்டிரன் சம்ஸ்கிருத மொழியில் 'அஸ்வத்தாமா கத குஞ்சரஹ' என்று யானை என்ற வார்த்தை கடைசியில் வரும்படி சொன்னான். 'குஞ்சரஹ' என்ற வார்த்தையை துரோணர் காதில் விழாத அளவுக்கு யுதிஷ்டிரன் மெல்லச் சொன்னான் என்றும், 'குஞ்சரஹ' என்று யுதிஷ்டிரன் சொன்னபோது கிருஷ்ணர் தன் சங்கை ஊதி அந்த வார்த்தை துரோணர் காதில் விழாதபடி செய்து விட்டான் என்றும் இருவிதமாகச் சொல்லப்படுவதுண்டு. அதைக்கேட்டு துரோணர் தன் வில்லைக் கீழே போட்டு விட்ட நிலையில் திருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றான். 

இந்த தர்மத்தை மீறிய செயலில் பீமனுக்கும் பங்கு உண்டு
என்பதால், அதற்குப் பிராயச்சித்தமாக (யுதிஷ்டிரன் திருச்செங்குன்றூர் கோவிலை புனர்நிர்மாணம் செய்தது போல்) பீமன் இந்தக் கோவிலைப்  புனர் நிர்மாணம் செய்தான் என்பது வரலாறு.

யுத்த தர்மத்துக்கு விரோதமாக  துரியோதனனைத் தொடையில் அடித்துக் கொன்ற  செயலுக்குப் பிராயச்சித்தம் தேடவே பீமன் இந்தக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்தான் என்றும் சொல்லப்படுவதுண்டு.
இந்தக் கோவிலில் ஒரு பெரிய கதை நிறுவப்பட்டுள்ளது. இது பீமனின் கதை என்று நம்பப்படுகிறது.
  
ராமபிரானின் மூதாதையர்களின் ஒருவனான சிபிச் சக்கரவர்த்தி, தன்  நாட்டில்கடும்  பஞ்சம் நிலவியபோது, அதை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இங்கே தவம் செய்து கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு தானம் அளிக்க விரும்பினான்.  பஞ்சகாலத்தில் தானம் வாங்கக்கூடாது என்பதால் அவர்கள் அரசன் அளித்த தானத்தை வாங்க மறுத்து விட்டனர்.

அதனால் கோபமடைந்த சிபி அவர்கள் தவத்தைக் கலைக்க கிருத்யை என்னும் அரக்கியை அனுப்பினான். ரிஷிகள் விஷ்ணுவிடம் பிரார்த்திக்க, விஷ்ணுவின் கட்டளைப்படி, இந்திரன் புலி வடிவில் வனித்து அரக்கியை அழித்தான். பெருமாள் சப்தரிஷிகளுக்குக் காட்சி கொடுத்தார் . இந்திரன் புலி வடிவில் வந்து முனிவர்களின் தவத்தைக் காத்ததால் இந்த இடம் புலியூர் என்று பெயர் பெற்றது.

மூலவர் - மாயப்பிரான். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் 
தாயார் - பொற்கொடி நாச்சியார் (தனிக்கோவில் இல்லை)

விமானம் - புருஷோத்தம விமானம் 

தீர்த்தம் - பிரக்ஞா சரஸ், பூஞ்சுனைத் தீர்த்தம்


இந்த திவ்ய தேசத்தின் பிரபாவம் பற்றி தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் விளக்குவதைக் கேளுங்கள்.







இந்த திவ்ய தேசத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்திருக்கிறார். திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடலில் இந்த திவ்ய தேசத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல் 
2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)  (2672)
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
எட்டாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
1. கருமா ணிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்,
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீரிதற் கென்செய்கேனா. (3759)

2. அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும்,
துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல்,
மின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான்,
புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே. (3760)

3. புகழு மிவள்நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்
திகழு மெரியோடு செல்வதொப்பச் செழுங்கதி ராழிமுதல்
புகழும் பொருபடை யேந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான்
திகழு மணிநெடு மாடம்நீடு திருப்பூலி யுர்வளமே. (3761)

4. ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியூர்,
சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான்,
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே. (3762)

5. புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே. (3763)

6. திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான்,
திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள,
அருளால் திருவருள் அவன் சென்று சேர்தண் திருப்பூலியுர்,
திருவருள் கமுகொண் பழுத்தது மெல்லியல் செவ்விதழே. (3764)

7. மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,
மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே. (3765)

8. மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர்,
படவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே. (3766)

9. பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே. (3767)

10. அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
நின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே. (3768)

11. நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை,
நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன்,சொல்
நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும்
நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே. (3769)

ஓம் நமோ நாராயணாய!



Saturday, February 3, 2018

50. திவ்யதேச தரிசன அனுபவம் - 29 திருநாவாய் (65)

தரிசனம் செய்த நாள்: 22.01.18  திங்கட்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
7. திருநாவாய்  (65)


பறந்து திரிதரினும் பாவியே னுள்ளம்
மறந்தும் பிறிதறிய மாட்டா - சிறந்த
திருநாவாய் வாழ்கின்ற தேவனையல் லாலென்
ஒருநாவாய் வாழ்த்தா துகந்து. (65)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'

பாரதப்புழா நதியின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது திருநாவாய் திவ்ய தேசம். திருவித்துவக்கோலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ஷோரனூர்-குட்டிபுரம் பஸ் மார்க்கத்தில் உள்ளது. திருநாவாய்  ரயில் நிலையமும் உள்ளது

நவயோகிகள் இந்தத் தலத்தில் ஒவ்வொருவராக ஒரு விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர். முதல் எட்டு யோகிகள் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்கள் மாயமாக மறைந்து விட்டன.

ஒன்பதாவது யோகி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து சந்நிதியை மூடி விட்டு மூன்றாம் நாள் திறந்து பார்த்தபோது விக்கிரகம் பூமிக்குள் அழுந்திக் கொண்டிருந்ததைக் கண்டார்.

அப்போதுதான் மற்ற எட்டு விக்கிரகங்களும் பூமிக்குள் அழுந்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்த அவர் பெருமாளிடம் அந்த நிலையிலேயே சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாள் அவர் கோரிக்கையை ஏற்று அப்படியே நிலை கொண்டார். இப்போதும் மூலவர் முழங்கால்கள் வரை பூமிக்குள் அழுந்திய நிலையில்தான் இருக்கிறாராம்.

நவயோகிஸ்தலம் என்பது மருவி நாவாய் என்று பெயர் வந்திருக்கலாம். இந்தப் பிறவிக்கடலை நாம் கடக்கப் பெருமாள் நாவாயாக இருந்து உதவுகிறார் என்ற  பொருளிலும் திருநாவாய் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

பாரதப்புழா நதியில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூக்களைப்  பறித்து கஜேந்திரன் பெருமாளுக்கு பூஜை செய்து வந்தான். ஒரு சமயம் கஜேந்திரன் பூக்களைப்  பறிப்பதற்கு முன்பே மகாலக்ஷ்மி அவற்றைப் பறித்துப் பெருமாளுக்கு பூஜை செய்யத் துவங்கினார்.

பூக்கள் கிடைக்காததால் கஜேந்திரன் பெருமாளிடம் முறையிட, பெருமாள் மகாலட்சுமியிடம் கஜேந்திரனைப் பூப்பறிக்க விட்டு அவன் அளிக்கும் பூக்களை மகாலக்ஷ்மியும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இங்கே பெருமாளும் தாயாரும் பெற்றோர்களாகவும், கஜேந்திரன் புதல்வனாகவும் இருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு,

கேரளக் கோவில்களில் மூலவரை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஒரு உயரமான பீடத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்க, ஒருவர் மட்டுமே குனிந்து போகக்கூடிய அளவில்தான் கர்ப்பக்கிருகம் இருக்கிறது. கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே  படிக்கட்டுக்குக் கீழே நின்றுதான் நாம்  தரிசனம் செய்ய வேண்டும்.

இருட்டான கர்ப்பக்கிருகத்தில் எண்ணெய் தீபங்களின் ஒளியில் பெருமாளின் திருவுருவம் ஓரளவுக்குத்தான் கண்ணுக்குப் புலப்படும். ஆரத்தி காட்டும்போது கூட இதே நிலைதான். குருவாயூர் உட்படப் பல கோவில்களிலும் இப்படித்தான். பரம்பொருளை முழுவதும் நம்மால் அறிய முடியாது என்ற உண்மையை நிலைநாட்டும் வகையிலேயே கேரள ஆலயங்கள் அமைந்திருப்பதாகக் கொள்ளலாம்.

மூலவர் - நாவாய் முகுந்தன். நான்கு கைகளுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். முகுந்தன் என்ற சொல்லுக்கு மோட்சத்தாய் அளிப்பவன் என்று பொருள் உண்டு.

தாயார் - மலர்மங்கை நாச்சியார். இங்கே தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. தாயார் சந்நிதி பெருமாள் சந்நிதிக்கு இடப்புறம் உள்ளது. கேரளக் கோயில்களில் தாயாருக்குத் தனி சந்நிதி என்பது அபூர்வம். பெரும்பாலான கோவில்களில் பெருமாளின் திருமார்பில் உறையும் தாயார்தான் ஒவ்வொரு கோவிலிலும் தனிப்பட்ட பெயர் சொல்லிக் குறிப்பிடப்படுவார்.

விமானம் - வேத விமானம்

தீர்த்தம் - செங்கமல ஸரஸ். கோவிலை ஒட்டியே ஓடும் பாரதப்புழாதான் இந்தக் கோவில் தீர்த்தமாக விளங்குகிறது. 

நாங்கள் இந்தக் கோவிலுக்குச் சென்றபோது பகல் 11 மணிக்கு மேல் ஆகி விட்டது. நடை சாத்தப்படுவதற்கு முன்பு பெருமாளுக்குத் திருவாராதனம் செய்வதற்காக கர்ப்பக்கிருகக் கதவு சாத்தப்பட்டிருந்தது. சற்று நேரம் கழித்துக் கதவு திறக்கப்பட்டதும் தீபங்களின் ஒளியில் நாவாய் முகுந்தனின் தரிசனம் அற்புதமாக அமைந்தது.   

மூலவர் சந்ந்நிதி மூடப்பட்டிருந்தபோது பக்கத்திலிருந்த தாயார் சந்நிதியில் போய் நின்றேன். தாயார் அற்புதமான தோற்றத்துடன், பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுபவராக இருக்கிறார்.

பிரகாரத்தில் கணபதி, பகவதி சந்நிதிகளும், கோவிலுக்கு வெளிப்புறம் சாஸ்தா சந்நிதியும் உள்ளன. 

பாரதப்புழாவின் மறுகரையில் தவனூர் என்ற இடத்தில் பிரம்மா, சிவன் ஆகியோருக்கான ஆலயம் இருக்கிறது. இங்கிருந்து அந்தக் கோவிலுக்குச் செல்லக் காலை வேளையில் படகுகள் கிடைக்கும் என்று கூறினார்கள்.

திருவித்துவக்கோடு ஒரு அலாதியான அமைதியை அளித்தது என்றால், திருநாவாய் பெரும் உற்சாகத்தையும், மனமகிழ்வையும் அளித்தது. கோவில் வாசலிலேயே பரந்து விரிந்து காணப்படும் பாரதப்புழா ஆற்றின் தோற்றம் கண்ணுக்கு குளிர்ச்சி. இந்த இடத்தில் தர்ப்பணம் செய்வது காசியில் தர்ப்பணம் செய்த பலனை அளிக்கும் என்று வழங்கப்படுகிறது.
மதியம் நடை சாத்தப்படுவதற்கு முன்பு  யாரும் உள்ளே செல்ல முடியாமல் மரக்கட்டைகளை/பலகைகளை வைத்துத் தடுத்து விடுவார்கள். இதற்கு ஸ்ரீவேலி (புனித வேலி) என்று பெயர். அப்போது உத்சவமூர்த்தி வாத்தியங்கள் முழங்க பிரகாரத்தில் மூன்று முறை வலம் வருவார். மிகச் சிறிய வடிவான உத்சவரை அர்ச்சகர் கையில் ஏந்தியபடி செல்வார். இதன்பிறகு உத்சவர் மீண்டும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டு, சந்நிதி திறக்கப்பட்டு ஆரத்தி காட்டுவார்கள். இந்த அருமையான தரிசனம் அன்று எங்களுக்கு கிடைத்தது. (வேறு சில கோவில்களிலும் இந்த தரிசனம் கிடைத்தது.)

இந்த திவ்யதேசம் பற்றி எங்கள் யாத்திரையின்போது வழிகாட்டியாக இருந்த தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கம் இதோ 





இந்த திவ்ய தேசத்தை நம்மாழ்வார் பதினோரு பாசுரங்களாலும், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். பாசுரங்கள் இதோ:

திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி
ஆறாம்  பத்து
எட்டாந் திருமொழி
3. தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே. (1520)

பத்தாம்  பத்து
முதல் திருமொழி
9. கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே. (1856)

நம்மாழ்வார் 
திருவாய்மொழி
ஒன்பதாம்   பத்து 
எட்டாம் திருமொழி
1. அறுக்கும்வினையாயின ஆகந்தவனை
நிறுத்தும்மனத் தொன்றிய சிந்தையினார்க்கு
வெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
குறுக்கும்வகையுண்டுகோலோ கொடியேற்கே. (3858)

2. கொடியேரிடைக் கோகனத்தவள்கேள்வன்
வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன்
நெடியானுறைசோலைகள் சூழ் திருநாவாய்
அடியேனணுகப்பெறுநாள் எவைகொவோ. (3859)

3. எவைகோலணுகப்பெறுநா ளென்றப்போதும்
கலைபில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன்
நவையில் திநாரணன்சேர் திருநாவாய்
அவையுள்புகலாவதோர் நாளறியேனே. (3860)

4. நாளேலறியேன் எனக்குள்ளநானும்
மீளாவடிமைப் பணிசெய்யப்புகுந்தேன்
நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா. (3861)

5.மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்
கண்ணாளனுலகத்துயில் தேவர்கட்கெல்லாம்
வண்ணாளன்விரும்பிறையும் திருநாவாய்
கண்ணாரக்களிக்கின்றது இங்கென்றுகொல்கண்டே. (3862)

6. கண்டேகளிக்கின்றது இங்கென்றுகொல்கண்கள்
தொண்டேபுனக்காயொழிந்தேன் துரிசின்றி
வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
கொண்டே யுறைகின்ற எங்கோவலர்கோவே. (3863)

7. கோவாகிய மாவலியைநிலங்கொண்டாய்
தேவாசுரம்செற்றவனே திருமாலே
நாவாயுறைகின்ற என்னாரணநம்பி
ஆவாலவடியானி னென்றருளாயே. (3864)

8. அருளாதொழிவாயருள்செய்து அடியேனைப்
பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்புகவைப்பாய்
மருளேயின்றி உன்னையென்னெஞ்சத்திருத்தும்
தேருளேதரு தென்திருநாவாயென்தேவே. (3865)

9. தேவர் முனிவர்க்கென்றும் காண்டற்கரியன்
மூவர்முதல்வன் ஒருமூவுலகாளி
தேவன்விரும்பி யுறையும் திருநாவாய்
யாவரணுகப்பெறுவார் இனியந்தோ. (3866)

10. அந்தோவணுகப்பெறுநாள் என்றெப்போதும்
சிந்தைகலங்கித் திருமாவென்றழைப்பன்
கொந்தார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா. (3867)

11.வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை
திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்
பண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார்
மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே. (3868)



ஓம் நமோ நாராயணாய!

Thursday, February 1, 2018

49. திவ்யதேச தரிசன அனுபவம் - 28 திருவித்துவக்கோடு (69)

தரிசனம் செய்த நாள்: 22.01.18  திங்கட்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
11. திருவித்துவக்கோடு (69)
பாரதப்புழாவிலிருந்து கோவிலின் தோற்றம் 


வாய்த்த கருமமினி மற்றில்லை நெஞ்சமே!
தோய்த்த தயிர்வெண்ணெய் தொட்டுண்ட - கூத்தன்
திருவிற் றுவக்கோடு சேர்ந்தாற் பிற‌விக்
கருவிற் றுவக்கோடுங் காண். (69) .
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி' 

கேரளாவில் திருமித்தக்கோடு என்று அறியப்படும் இத்திருத்தலம்  கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள பட்டம்பி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பாரதப்புழா நதியை ஒட்டி அதன் வடகரையில் சுற்றிலும் மரங்கள் அடர்ந்த  ரம்மியமான  சூழலில் அமைந்துள்ள இந்தக் கோயில் பற்றி இந்தக் காணொளி சுருக்கமாக விளக்குகிறது,
 கோயிலின் முன்புறம் சிவபெருமான் சந்நிதி உள்ளது. இந்த ஊரிலிருந்து  ஒரு நம்பூதிரி காசிக்குச் சென்று திரும்பும்போது அவருடன் காசி விஸ்வநாதரும் வந்து விட்டதாகவும், நம்பூதிரி குடையை இங்கே வைத்து விட்டு அருகிலிருந்த பாரதப்புழாவில் குளிக்கச் சென்றபோது அவருடைய குடைக்குள் இருந்த சிவபெருமான் சுயம்புவாக இங்கேயே நிலைகொண்டு விட்டதாகவும் ஒரு வரலாறு உள்ளது.
சிறிதளவே நீர் உள்ள பாரதப்புழா 

சிவபெருமான் சந்நிதிக்குப் பின்புறம் வித்துவக்கோட்டு அம்மான் என்று குலசேகர ஆழ்வாரால் அழைக்கப்பட்ட உய்யவந்த பெருமாளின் சந்நிதி உள்ளது.

அம்பரீஷன் என்ற மன்னன் இங்கு தவம் செய்தபோது பெருமாள் இந்திரன் தோற்றத்தில் ஐராவதத்தில் வந்து அவனுக்கு வமளிக்க முன்வந்தார். இந்திரனிடம் தான் பெற விரும்புவது எதுவும் இல்லை, பெருமாளின் திருவடிகளை அடைவதே தனது நோக்கம் என்று அம்பரீஷன் கூறியதும் பெருமாள் அவனுக்குக் காட்சி அளித்து அவனுக்கு மோட்சம் அளித்தார்.

வியூகம் என்ற நிலையில் விஷ்ணு வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு  தோற்றங்களில் பகவான் விளங்குகிறார். அந்த நான்கு தோற்றங்களையும் அவர் அம்பரீஷனுக்குக் காட்டி அருளினார். அதனால் இங்கு விஷ்ணுவுக்கு நான்கு தனிக்கோயில்கள் உள்ளன.

இந்த நான்கு கோயில்களும் பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. மத்தியில் உள்ள உய்யவந்த பெருமாள் சந்நிதி அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவருக்கு வலப்புறம் இருக்கும் இரண்டு சந்நிதிகளில் ஒன்று யுதிஷ்டிரனாலும், இன்னொன்று நகுல சகாதேவர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இடப்புறம் சற்றுப் பின்னே இருக்கும் சந்நிதி பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. (கேரளா திவ்ய தேசங்களில் மிகப் பெரும்பாலானவை பாண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்ட மூர்த்திகளைக் கொண்டு விளங்குகின்றன.)

நான்கு பெருமாள் சந்நிதிகளும், ஒரு சிவன் சந்நிதியும் இருப்பதால் இந்தக் கோவில் "அஞ்சுமூர்த்திக் கோவில்" என்று பெயர் பெற்றிருக்கிறது.

இந்த சந்நிதிகள் தவிர கணபதி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இருவருக்கும் ஒரு சந்நிதியும், சாஸ்தாவுக்கு ஒரு சந்நிதியும் உள்ளன.

மூலவர் உய்யவந்த பெருமாள் என்றும் சம்ஸ்கிருதத்தில் அபயப்பிரதான்  என்றும் அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.
பாரதப்புழா 

அம்பரீஷன் இங்கு முக்தி அடைந்ததால், வைகுண்டப்பதவிக்கு வித்தாக அமைந்த இந்தத் தலம் வித்துவக்கோடு என்று பெயர் பெற்றது.

தாயார் - வித்துவக்கோட்டுவல்லித்  தாயார், பத்மபாணி நாச்சியார்  என்று அழைக்கப்படுகிறார். தாயாருக்குத் தனிக்கோவிலோ விக்கிரகமோ இல்லை. பெருமாளின் திருமார்பில் இடம் பெற்றிருக்கும் தாயாரே இந்தப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.

விமானம் - தத்வகாஞ்சன விமானம்

தீர்த்தம் - சக்கர தீர்த்தம். கோயிலை ஒட்டி ஓடும் பாரதப்புழாவே இந்தக் கோயிலின் தீர்த்தம்.

நான் கோவிலுக்குச் சென்ற நேரம் காலை சுமார் 6 மணி. பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த இனிய வேளையில், மரங்கள் சூழ நதிக்கரையில் அமைந்திருந்த இந்தக் கோவில் தரிசனம் ஒரு பரவச உணர்வை  ஏற்படுத்தியது.

இந்த திவ்யதேசத்தின் சிறப்புகளை எங்கள் வழிகாட்டி தஞ்சை திரூ ரமேஷ் அவர்கள் அருமையாக எடுத்துரைப்பதைக் கீழே உள்ள காணொளியில் கேட்கலாம். நான் எடுத்த இந்தக் காணொளியைப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு அனுமதி அளித்த ரமேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. (ஒலியின் அளவு சற்றுக் குறைவாக இருப்பதால் ஹெட்ஃபோன்/இயர்ஃபோன் மூலம் கேட்பது சிறப்பாக இருக்கும்.)
இந்தக் கோவில் பற்றிக் குலசேகராழ்வார் 10 பாடல்கள் பாடியுள்ளார். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
நாலாயிர திவ்யப் பிரபந்தம் 
முதலாயிரம் 
குலசேகராழ்வார்   
பெருமாள் திருமொழி 
 ஐந்தாந் திருமொழி
1. தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே (688)

2. கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல்
விண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே (689)

3. மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே (690)

4. வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே (691)

5. வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (692)

6. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே (693)

7. எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்
டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே (694)

8. தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே (695)

9. நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே  (696)

10. விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே (697)


ஓம்  நமோ நாராயணாய!

Monday, January 1, 2018

48. திவ்யதேச தரிசன அனுபவம் - 27 திருக்கடிகை (சோளிங்கர்)

தரிசனம் செய்த நாள்: 24.09.16  சனிக்கிழமை 
22. திருக்கடிகை (95)

சீரருளா னம்மைத் திருத்திநா முன்னறியாக
கூரறிவுந் தந்தடிமை கொண்டதற்கே - நேரே
ஒருகடிகை யம்மனமே! உள்ளுகிலாய் முத்தி
தருசடிகை மாயவனைத் தான். (95).
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி' 

பிரஹலாதனுக்கு அருளிய நரசிம்மரைக் காண விரும்பி வசிஷ்டர், வாமதேவர், காஸ்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் ஆகிய ஏழு முனிவர்கள் இங்கு தவம் செய்தனர். அப்போது அவர்களுக்கு காலன், கேயன் என்ற இரண்டு அசுரர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

அப்போதுதான் இலங்கைப் போரை முடித்திருந்த ராமர் முனிவர்களைக் காக்க இங்கே ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயர் அசுரர்களுடன் போரிட்டு முனிவர்களைக் காப்பாற்றினார். 

முனிவர்களின் தவத்தின் பலனாக நரசிம்மர் அவர்களுக்கு இங்கே யோக நரசிம்மராக ஒரு கடிகை (ஒரு நாழிகை அதாவது 24 நிமிடங்கள்) காட்சி அளித்தார். (இதற்கு முன்பு விசுவாமித்திரர் இங்கே நரசிம்மர் குறித்துத் தவம் செய்த பிறகுதான் அவர் பிரம்ம ரிஷி என்ற உயர் நிலையை அடைந்தார் என்று கூறப்படுகிறது.) 

அதனால் இந்தத் திருத்தலத்துக்கு கடிகாசலம், திருக்கடிகை என்ற பெயர்கள் உண்டு. சோழசிம்மபுரம் என்றும் பெயர் உண்டு. இதுவே மருவி சோளிங்கபுரம் என்றும் சோளிங்கர் என்றும் ஆகியது.

750 அடி உயரம் உள்ள பெரிய மலையில் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். இவரை தரிசிக்க 1305 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே செல்ல விஞ்ச் அமைக்க இரண்டு மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவை வெற்றிகரமாக அமையவில்லை.

ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான முதலியாண்டான் வழி வந்த தொட்டாச்சாரியார் என்பவர்  இந்தக் கோவிலில் சில கட்டுமானப் பணிகள் செய்திருக்கிறார். ராமானுஜரால் நிறுவப்பட்ட  74 சிம்மாசனாதிபதிகளில் கந்தாடையார் என்ற வழி வந்தவர் இவர்.

இவர் ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் கருடசேவைக்குச் சென்று தரிசனம் செடிவது உண்டு, ஒருமுறை அங்கே செல்ல முடியாமல் வருத்தத்துடன் தக்கான்  குளத்தருகில் அமர்ந்திருந்தபோது வரதராஜர் கருட சேவைக் கோலத்தில் இவர் முன் தோன்றினார். இன்றும் வரதராஜர் கோவில் கருட சேவையின் போது, கருடன் மீது அமர்ந்திருக்கும் வரதராஜர், கோவில் வாசலில் ஒரு நிமிடம் நின்று  தொட்டாச்சாரியாருக்குக் காட்சி கொடுக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இவர் வழி வந்தவர்கள்தான் இன்றும் இந்தத் திருக்கோவிலில் பணி செய்து வருகிறார்கள். இவர்கள் தினமும் 1305 படிகள் ஏறி மேலே சென்று பெருமாளுக்கு சேவை செய்து வீட்டுக் கீழே இறங்கி வருகிறார்கள்.

அருகில் உள்ள 350 அடி உயரம் கொண்ட சிறிய மலையில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். சிறிய மலைக்கு 406 படிகள். இங்கே ஆஞ்சநேயர் அமர்ந்த திருக்கோலத்தில் சங்கு சக்கரம் தரித்துக் கையில் ஜபமாலை ஏந்தி யோக ஆஞ்சநேயராகக் காட்சி அளிக்கிறார். இரண்டு கைகளில் ஜெபமாலையும், இரண்டு கைகளில் சங்கு சக்கரமுமாக நான்கு கரங்கள் கொண்ட சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயரும் நரசிம்மரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்கின்றனர்.

ஆஞ்சநேயர் சந்நிதிக்கு அருகே ராமர், ரங்கநாதர் சந்நிதிகள் உள்ளன. 

சென்னையிலிருந்து 125 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ள இக்கோவிலுக்குத் திருத்தணி, அரக்கோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது .திருத்தணி, அரக்கோணம் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.

பெரிய மலையில் யோக நரசிம்மர் மற்றும் அமிர்தபலவல்லித் தாயாரின் சந்நிதிகள் உள்ளன.  200 அடி நீளம், 150 அடி அகலம் கொண்ட கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் வாசல் வடக்கு நோக்கி உள்ளது. நரசிம்மர் சாளக்ராம மாலை அணிந்து கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நவராத்திரியின் பொது தாயார் கீழே இறங்கி வந்து இரண்டு மாதஙகள் அங்கிருந்து பக்தர்களுக்கு அருள்கிறார்.

உற்சவர் பக்தோசிதப்   பெருமாள் மலையடிவாரத்திலிருந்து  4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொண்டபாளையத்தில் உள்ள கோவிலில் சேவை சாதிக்கிறார். உத்சவத் தாயாரின் பெயர் சுதாவல்லி. 

மலையடிவாரத்தில் பிரம்ம தீர்த்தம் (தக்கான் குளம்) என்ற திருக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி விட்டுத்தான் கோவிலுக்குச்  செல்ல வேண்டும் என்ற மரபு உண்டு. ஆனால் இது கட்டாயம் இல்லை. திருக்குளத்தின் கரையில்ல நின்றபடியே குளத்து நீரில் ஷவர் மூலம் நீராட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

படியேறிச் செல்லும்போது  குரங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும். நான் அர்ச்சனைப் பொருட்கள் அடங்கிய பையுடன் சென்று கொண்டிருந்தபோது ஒரு குரங்கு என் கையிலிருந்த பையைத் தட்டிப் பறித்து வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு ஒடி விட்டது. 

முதலில் பெரிய மலை ஏறி நரசிம்மரை தரிசித்து விட்டு இறங்கி, பிறகு சின்ன மலையில் ஏறி ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.

விமானம்: சிம்ம கோஷ்டக்ருதி விமானம் 
தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஹனுமந்த தீர்த்தம் 

இந்தத் திருத்தலத்தை பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கை ஆழ்வார் மூன்று பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள் 

 தக்கான், அக்காரக்கனி (வெல்லம் போன்ற இனிப்புடைய கனி)என்ற பெயர்களால் பெருமாளை திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கிறார்.

பேயாழ்வார்  
மூன்றாம் திருவந்தாதி  
ஏழாம் திருமொழி 
1.பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர். (2342)


திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி
எட்டாம் பத்து 
ஒன்பதாம் திருமொழி 

4. மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.. (1731)

9. கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ.  (1736)

சிறிய திருமடல் 
2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)
ஓம் நமோ நாராயணாய !


(திருமாலின் திருவருளால் தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22ஐயும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.)

Sunday, December 31, 2017

47. திவ்யதேச தரிசன அனுபவம் - 26 திருக்கடல்மல்லை (93)

தரிசனம் செய்த நாள்: செப்டம்பர் 2016 
20. திருக்கடன்மல்லை (93)


செறிந்த பணைபறித்துத் திண்களிற்றைச் சாடி
முறிந்துவிழப் பாகனையு மோதி - எறிந்து
தருக்கடன்மல் லைக்குமைந்தான் றஞ்சமென்று நெஞ்சே!
திருக்கடன்மல் லைக்குட் டிரி! (93)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின்  108 திருப்பதி  அந்தாதி 

சென்னையிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் மகாபலிபுரத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை, கடற்கரைக் கோயில், பாறைச் சிற்பங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ளது இக்கோவில்.


புண்டரீகர் என்ற முனிவர் இங்கிருந்த திருக்குளத்தில் பறித்த தாமரைப் பூக்களை ஒரு பூக்கூடையில் வைத்துக்கொண்டு கடல் கடந்து சென்று பரமபதநாதனை அடைந்து அவர் திருவடியில் பூக்களைச்  சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆவலில் கடல் நீரைக் கைகளால் இறைக்க முயன்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முதியவராக அங்கே வந்த பெருமாள் முனிவரிடம் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்க, முனிவரும் கடல்நீரை இறைக்கும் பணியை முதியவரிடம் விட்டு விட்டு, அவருக்கு உணவு சேகரித்து வரப் போனார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது முதியவர் நின்ற இடத்தில் பெருமாள் தரையில் படுத்துக் கொண்டிருந்தார் என்பது தல வரலாறு .

பெருமாள் ஆதிசேஷன் இல்லாமல் தரையில் சயனித்திருப்பதால் இவருக்கு தலைசயனப் பெருமாள் என்று பெயர்.


மூலவர் - ஸ்தல சயனப்பெருமாள் (தமிழில்  தலசயனப் பெருமாள்)
ஆதிசேஷன் இல்லாமல் தரையில் சயனித்திருக்கும் கோலம் 
கிழக்கு நோக்கிய திருமண்டலம். நான்கு திருக்கரங்களில் இரண்டைத் தரையில் பக்கவாட்டில் வைத்தபடியும், ஒரு கையைத் தலைக்கருகே வைத்தபடியும், ஒரு கையை உயர்த்தி உபதேச முத்திரையைக்  (ஞான முத்திரை)  காட்டியபடியும் சயனித்திருக்கிறார். விரல்களை மடக்கிய நிலையில் இருக்கும் கை பெருமாள் திருவடியில் நின்றிருக்கும் புண்டரிக முனிவரை அழைக்கும் முத்திரை என்ற கருத்தும் உண்டு.

திருவடிகல் தாமரை மீது நிலைத்திருக்க, திருவடிக்கு அருகே புண்டரிக முனிவர் நின்றிருக்கிறார்.

உத்சவர் - உலகுய்ய நின்றார்  இவர் கையில் தாமரைப்பூவுடன் நிற்கிறார்.

தாயார் - நிலமங்கைத் தாயார். இவருக்குப் பிரகாரத்தில் தனிச் சந்நிதி உள்ளது.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் இக்கோவில் பற்றிய குறிப்பு இருக்கிறது.

தீர்த்தம் - புண்டரிக புஷ்கரணி, கருட நதி 

விமானம் -  ககனாக்ருதி அல்லது ஆனந்த விமானம் 

தலவிருட்சம் - புன்னை  மரம் 

பிரகாரத்தில் நரசிம்மர், ராமர், ஆண்டாள், பூதத்தாழ்வார்  சந்நிதிகள் உள்ளன..

இந்தக் கோவிலுக்கருகே கலங்கரை விளக்கம் அருகில் ஆதிவராகருக்கு ஒரு குகைக்கோயில் இருக்கிறது. திருவிடந்தையில் தாயார் வராகரின் இடதுபுறம் இருப்பதற்கு மாறாக இங்கே தாயார் வராகரின் வலப்புறம் இருப்பதால் இவர் வலவெந்தை ஞானப்பிரான் என்று அழைக்கப் படுகிறார்.

கடற்கரையில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில் மூன்று கோயில்கள் கொண்டது. இவற்றில் இரண்டில் சிவபெருமானும், நடுவில் உள்ள சந்நிதியில் விஷ்ணு தரையில் சயனித்தபடி தசயனப் பெருமாளாகவும் இருக்கிறார்கள்.

இது பூதத்தாழ்வார் அவதாரத் தலம். கோவிலுக்கு அருகே பூதத்தாழ்வாருக்கு ஒரு கோவில் இருக்கிறது..  
பூதத்தாழ்வார் 
இரண்டாம் திருவந்தாதி
ஏழாம் திருமொழி 
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம். (2251)

திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 

இரண்டாம் பத்து 
ஐந்தாம் திருமொழி
1. பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.  (1088)

2, பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி
மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (1089)

3. உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. (1090)

4. பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப் பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே
கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. (1091)

5. பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. (1092)

6. கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. (1093)

7. பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. (1094)

8. பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. (1095)

9. தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண லங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை,
தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. (1096)

10. படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ. (1097)

மூன்றாம் பத்து 
ஐந்தாம் திருமொழி
8. சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய், அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ,
கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய்,இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே. (1195)
 ஏழாம் பத்து 
முதல் திருமொழி
4. புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,
உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,
கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,
வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே (1551)

திருகுறுந்தாண்டகம்
இரண்டாம் திருமொழி 
 பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே? (2050)
திருநெடுந்தாண்டகம் 
முதல் திருமொழி 
9. வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய். பேராய்,
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா,
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே. (2060)
சிறிய திருமடல் 
2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

பெரிய மடல் 
2674. மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை  வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)
ஓம் நமோ நாராயணாய !