Saturday, February 10, 2018

56.திவ்யதேச தரிசன அனுபவம் - 35 திருச்செங்குன்றூர் (64)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
6. திருச்செங்குன்றூர் (64)


வரவேண்டுங் கண்டாய் மதிகலங்கி விக்குள்ற் 
பொரவே யுயிர்மாயும் போழ்து - பரமேட்டி!
செங்குன்றூர் மாலே! சிறைப்பறவை மேற்கனகப்
பைங்குன் றூர் கார்போற் பறந்து. (64)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

திருச்செங்குன்றூர் (திருச்செங்கண்ணூர்), திருவாறன்விளை, திருவல்லவாழ், திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆகிய ஐந்து திவ்யதேசங்களும் சற்று அருகருகிலேயே அமைந்துள்ளன. திருச்செங்குன்றூர் திவ்யதேசம் திருச்சிற்றாறு  என்றும் அழைக்கப்படுகிறது. பம்பா நதியின் கிளையான திருச்சிற்றாறின் கரையில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர்.
மகாபாரதப் போரின்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமா கொல்லப்பட்டதாக அவரை நம்ப வைத்து அதன் மூலம் அவரை பலவீனப்படுத்தி வீழ்த்தியதில் யுதிஷ்டிரனுக்கும் பங்கு உண்டு. இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள யுதிஷ்டிரன் இந்தக்  கோவிலைப் புனர் நிர்மாணம் செய்தான்.

சிவபெருமானிடம் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி பஸ்மாசுரன் என்ற அரக்கன் அவரையே அழிக்க முன்றபோது மோகினியாக வந்து நடனமாடி அரக்கனை அழித்த வரலாறும் இந்த திவ்யதேசத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.  
மூலவர் - இமையவரப்பன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். வழக்கத்துக்கு மாறாக, இங்கே சங்கு வலக்கையிலும், சக்கரம் இடக்கையிலும் இருக்கிறது.
தாயார் - செங்கமலவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார் இல்லை)
விமானம் - ஜகஜ்ஜோதி விமானம் 
தீர்த்தம் - சங்க
தீர்த்தம்
இந்த திவ்யதேசம் பற்றித் தஞ்சை ரமேஷ் அவர்களின் விளக்கவுரையை இந்தக் காணொளியில் கேட்டு மகிழலாம். 




நம்மாழ்வார் 
திருவாய்மொழி
எட்டாம் பத்து
நான்காம்  திருமொழி
1. வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பி ணைக் குவடிறுத் துருட்டி,
ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,
போர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,
சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே.(3704)

2. எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே? (3705)

3. என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான்,
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான்,
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால்
நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.(3706)

4. பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும் நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,
குறிய மாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமா ணிக்கமென் எம்மான்,
செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான் அடியிணை யல்லதோர் அரணே. (3707)

5. அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும், அவனை
அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனு றை கின்ற,
நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும்,
நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே. (3708)

6. எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே. (3709)

7. திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே. (3710)

8. திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே.(3711)

9. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே. (3712)

10. அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே. (3713)

11. தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே (3714)
ஓம் நமோ நாராயணாய!



No comments:

Post a Comment