Friday, October 18, 2019

82. திவ்யதேச தரிசன அனுபவம் - 61. திருப்பார்த்தன்பள்ளி (40)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
40. திருப்பார்த்தன்பள்ளி
ஒத்தமர ரேத்து மொளிவிசும்பும் பாற்கடலும்
இத்தலத்திற் காண்பரிய வென்னெஞ்சே!- சித்துணர்ந்த‌
தீர்த்தன்பள் ளிக்கிருந்து செப்பவெளி நின்றானைப்
பார்த்தன்பள் ளிக்குட் பணி. (40) 
   - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி 

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

மூலவர்: ஸ்ரீதேவி, பூதேவி நீளாதேவி சமேத தாமரையாள் கேள்வன், லக்ஷ்மி ரங்கர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
பிரத்யட்சம்: அர்ஜுனன், வருணன், ஏகாதச ருத்ரர்

உற்சவர்: பார்த்தசாரதி

தாயார்: செங்கமலவல்லி, தாமரை நாயகி

தீர்த்தம்: கட்க தீர்த்தம், சங்கரசரஸ்

விமானம்: நாராயண விமானம்

காவிரிக்கரையில் அமைந்துள்ள திவ்யதேசம் இது.

தென்னாட்டில் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்த அர்ஜுனன் தாகம் எடுத்து இங்கு தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியரிடம் நீர் கேட்க, அவருடைய கமண்டலத்தில் நீர் இல்லாததால், அவர் கண்ணனை வேண்டுமாறு அர்ஜுனனிடம் கூறினார். அர்ஜுனன் கண்ணனைப் பிரார்த்திக்க, கண்ணன் அர்ஜுனனுக்கு ஒரு கத்தியைக்  கொடுத்தார். அந்தக் கத்தியால் பூமியைப் பிளந்ததும், நீர் பெருக்கெடுத்து வந்தது. அதனால் இந்த புஷ்கரணி கட்க தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. கட்கம் என்றால் கத்தி.

உற்சவர் கையில் கத்தியுடன் இருக்கிறார்.

கோலவில்லி  ராமர் சங்கு, சக்கரம், வில்லுடன் நான்கு கரங்கள் உள்ளவராக திருவெள்ளியங்குடியில் உள்ள கோலவில்லி ராமரும் இதேபோன்றுதான் காட்சியளிக்கிறார். அது தவிர மூலவர் சயனக்கோலத்திலும் இருக்கிறார்!)
உற்சவராகக் காட்சி அளிக்கிறார். கோலவல்லி ராமர் மூலவர், சற்றுத் தொலைவில் அமைந்துள்ள ஒரு தோப்பில் தனிக்கோவில் கொண்டிருக்கிறார். இங்கு ராமர் மகாவிஷ்ணு போல் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிப்பது குறிப்பிடத் தாக்கது. (

அர்ஜுனனுக்கு அவன் யார் என்ற ஞானத்தை இங்கு கண்ணன் புகட்டினார்.

பிரகாரத்தில் அர்ஜுனனுக்கு சந்நிதி இருக்கிறது. இதே சந்நிதியில் அர்ஜுனனுக்கு அருகில் கிருஷ்ணன், பார்த்தசாரதி விக்கிரகங்கள் இருக்கின்றன. கோவிலுக்கு முன்புறம் அகஸ்தியர்  சந்நிதி இருக்கிறது.

செங்கமலவல்லித் தாயார், ஆண்டாள் சந்நிதிகள் இருக்கின்றன.

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் கேட்கலாம்.


இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பொய்கை ஆழ்வாரின் கீழ்க்கண்ட திருவந்தாதிப் பாசுரமும் இந்த திவயதேசத்தைப் பற்றியதுதான் என்ற ஒரு கருத்து உண்டு.

பெயருங் கருங்கடலே நோக்குமாறு ஒன்பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள்
கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு

தாமரையாள் கேள்வன் என்பது இந்த திவ்யதேச எம்பிரானைக் குறிப்பதாகத்தான் தோன்றுகிறது. ஆயினும், என்ன காரணத்தினாலேயே, இந்தப் பாசுரம் இந்த திவ்ய தேச மங்களாசாசனமாகக் கொள்ளப்படவில்லை.

திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
எட்டாம் திருமொழி
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி
1. கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்
குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,
தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,
பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1318)

2. கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும்,
வஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும்,
செஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1319)

3. அண்டர் கோனென் னானையென்றும் ஆயர் மாதர் கொங்கைபுல்கு
செண்ட னென்றும், நான்மறைகள் தேடி யோடும் செல்வனென்றும்,
வண்டு லவுபொழில் கொள்நாங்கை மன்னு மாய னென்றென்றோதி,
பண்டு போலன் றென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1320)

4. கொல்லை யானாள் பரிசழிந்தாள் கோல்வ ளையார் தம்முகப்பே,
மல்லை முன்னீர் தட்டிலங்கை கட்ட ழித்த மாயனென்றும்,
செல்வம் மல்கு மறையோர்நாங்கை தேவ தேவ னென்றென்றோதி,
பல்வ ளையா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே! (1321)

5. அரக்க ராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,
குரக்க ரசனென் றும்கோல வில்லி யென்றும், மாமதியை
நெருக்கு மாட நீடுநாங்கை நின்ம லன்தா னென்றென்றோதி,
பரக்க  ழிந்தா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே! (1322)

6. ஞால முற்று முண்டுமிழிந்த நாத னென்றும், நானி லஞ்சூழ்
வேலையன்ன கோலமேனி வண்ண னென்றும், மேலெழுந்து
சேலு களும்வயல் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1323)

7. நாடி யென்றனுள் ளொங்கொண்ட நாத னென்றும், நான்மறைகள்
தேடி யென்றும் காணமாட்டாச் செல்வ னென்றும்,சிறை கொள்வண்டு
சேடு லவுபொழில் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பாட கம்சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1324)

8. உலக மேத்து மொருவனென்றும் ஒண்சு டரோடும் பரெய்தா,
நிலவு மாழிப் படையனென்றும் நேச னென்றும், தென்திசைக்குத்
திலத மன்ன மறையோர்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பலரு மேச வென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே! (1325)

9. கண்ண னென்றும் வானவர்கள் காத லித்துமலர் கள்தூவும்,
எண்ண னென்று மின்பனென்றும் ஏழு லுகுக் காதியென்றும்,
திண்ண மாட நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பண்ணி னன்ன மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1326)

10. பாருள் நல்லமறை யோர்நாங்கைப் பார்த்தன் பள்ளிசெங் கண்மாலை,
வார்கொள் நல்ல முலைமடவாள் பாடலைந் தாய் மொழிந்தமாற்றம்,
கூர்கொள் நல்ல வேல்கலியன் கூறு தமிழ் பத்தும்வல்லார்,
ஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளு மெய்துவாரே! (1327)

|ஓம் நமோ நாராயணாய|


No comments:

Post a Comment